தமிழ் சினிமாவில் பிரபலமான கதையாசிரியர்களில் கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. திராவிட கழக பிரச்சாரதிர்க்கும், கொள்கை பரப்ப உதவும் ஒரு கருவியாகவும் கதை மாந்தர்களை உபயோகப் படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டாலும், கருப்பு வெள்ளை காலத்தின் மத்திம தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பல வசனங்கள் கலைஞர் எழுதியதே. பராசக்தி, மனோகரா என்று இன்றளவும் அவரது வசனங்கள் பல இடங்களில் பல படங்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த படங்களை தவிர கலைஞர் வசனம் எழுதி சிறப்பாக பேசப்பட்ட படங்களாகிய மலைக்கள்ளன், புதுமை பித்தன், மருதநாட்டு இளவரசி போன்றவையும் வெற்றி பெற்றவையே. இவையெல்லாம் தமிழ் சினிமாவின் மத்திம காலத்தில் வந்த படங்கள்.
கருப்பு வெள்ளையில் இருந்து முழு வண்ணத்திற்கு படங்கள் மாறிய பின்னரும் கலைஞர் பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினர். குறிப்பிடும்படியான படங்கள் என்று நீதிக்கு தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனிக்கள், நியாயத்தராசு, தென்றல் சுடும் போன்றவற்றை சொல்லலாம். இவையெல்லாம் எண்பதுகளில் வந்தவை (என்று நினைக்கிறேன்). கலைஞர் ஆட்சியில் இல்லாதபோது நிறைய நேரம் இருந்ததால் இப்படி ஒரே படங்களாக எடுத்துக்கொண்டு இருந்தார் என்று கிண்டலாக சொல்வோரும் உண்டு. இந்த படங்கள் எல்லாம் அவை ரிலீஸ் ஆன காலகட்டங்களில் சிலாகித்து பேசப்பட்டாளும்கூட இவற்றில் எதுவுமே மகத்தான வெற்றி பெற்ற (சூப்பர் ஹிட்) படங்கள் இல்லை என்பதை தீவிர திமுக அனுதாபி கூட சொல்லிவிடுவார்.
ஆனால் தற்போதைய புதிய தலைமுறைக்கு கலைஞர் கொடுத்துள்ள படங்களை சற்றே பார்ப்போம்: பாசக்கிளிகள் (உண்மையில் இந்த படத்தின் பெயர் பாசக் மட்டும்தான், போஸ்டரிலேயே பாசக் என்று மட்டும்தான் போட்டு இருப்பார்கள். அருகில் மூன்று கிளிகளின் படங்கள் இருக்கும். நாம் அதனையும் இணைத்து படித்து பாசக்கிளிகள் என்று புரிந்துகொள்ள வேண்டுமாம்), கண்ணம்மா, உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் போன்றவையே. இவற்றை எல்லாம் பார்த்த (அ) கேள்விப்பட்ட இன்றைய புதிய தலைமுறை கண்டிப்பாக கலைஞரை ஒரு மொக்கையான எழுத்தாளர் என்றே முடிவெடுதிருப்பார்கள். உண்மையை அறிய இவர்கள் கண்டிப்பாக பராசக்தி, மனோகரா போன்ற படங்களை பார்க்கப்போவதும் இல்லை. பார்த்தவர்கள் சொல்வதை கேட்கப்போவதும் இல்லை. ராணி காமிக்ஸின் கடைசி காலத்தில் வந்த மொக்கை கதைகளை மட்டுமே படிக்கும் வாய்ப்பை பெற்ற இன்றைய புதிய தலைமுறை ஒட்டுமொத்த ராணி காமிக்ஸ் கதைகளையும் மொக்கை என்று சொல்வதைப்போன்றது இந்த கருத்து.
இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும்விதமாக கடைசியாக ஒரு ஹிட் கொடுங்கள் கலைஞரே என்று திமுக திம்மிகள் பலரும் ஆசைப்பட அதற்க்கு பதில் சொல்லும்விதமாக வந்ததே பொன்னர் சங்கர். (ராஜ்கிரண் போல மீசையை முறுக்கிக்கொண்டு சொல்வதனால் பொன்னர்-----------------------------------------------------ஷங்கர்). யுவகிருஷ்ணா சொல்வதைப்போல, கடந்த இரு தசாப்தங்களாக கலைஞர் மொக்கையாக மட்டுமே வசனம் எழுதுவார் என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டை தூள் தூளாக்கியிருக்கும் திரைப்படம் பொன்னர் சங்கர். இந்த படத்தை பற்றிய ஒரு ஒப்பீட்டிற்கு செல்லும்முன் ஒரு சிறிய ப்ளாஷ் பேக்:
கதையின் வடிவம்: கொங்குமண்டலம் என்று சொல்லப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளில் எல்லை தெய்வங்களாக இன்றளவும் வழிபடும் குல தெய்வங்களாக இருப்பவர்களே பொன்னர் சங்கர் (இவர்களின் கோவில்கள் பற்றிய ஒரு நேரடி பதிவிற்கு இங்கே கிளிக்கவும்). கதையானது பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், கதையின் முக்கிய பாத்திரங்கள் இரண்டு இனங்களை சேர்ந்தவர்களாகவும் (வெள்ளாளர் மற்றும் வேட்டுவ இனத்தார்) பரம்பரைக் கதைகளாக சொல் வழக்கில் கூறப்பட்டு பின்னர் தமிழக கலைகளில் ஒன்றாகிய உடுக்கையடிப்பாடல் மூலம் பிரபலப்படுதப்பட்டு (முக்கியமாக அழியாமல் தொடர்ந்து வழக்கில் இருக்க வகை செய்து) வந்த கதையே இது.
உடுக்கையடிப்பாடல் மூலம் இந்த கதையானது பரம்பரை பரம்பரையாக பயணம் செய்து வந்தது. ஒரு காலகட்டத்தில் எங்கே வெறும் சொல் வழக்கில் இருந்தே அழிந்து விடுமோ என்ற சிந்தனை தலைதூக்க ஆரம்பித்த நேரத்தில் இந்த கதையை எழுத்துருவாக்க பலரும் நினைத்தனர். அவ்வாறே திரு பிச்சன் அவர்கள் முன்வந்தார். இவரே இந்த கதையை அண்ணன்மார் கதை என்ற பெயரில் எழுதினார். இவருடைய கதை வடிவை ஒட்டியே இன்றளவும் பலராலும் பொன்னர் சங்கர் கதைகள் எழுதப்படுகின்றன (வால்மீகி ராமாயணத்தை எழுதினாலும், அதனை சார்ந்து தங்கள் நடையில் பலரும் எழுதுவதைப்போல).
கலைஞரின் பொன்னர் சங்கர் தொடர்கதை
எண்பதுகளின் மத்திமத்தில் (17-07-87) குங்குமம் இதழில் கலைஞரின் கைவண்ணத்தில் தொடர்கதையாக வாராவாரம் வந்து (62 weeks) கலைஞர் ரசிகர்களால் சிறப்பாக பேசப்பட்ட தொடர்கதை இந்த பொன்னர் ஷங்கர். தொடர்கதைக்கு கோட்டோவியங்கள் வரைந்தவர் கோபுலு. முதல் வாரம் கலைஞர் கருணாநிதி அவர்கள் பொன்னர் சங்கர் பற்றி ஒரு முன்னுரையை எழுதி இருப்பார். மொத்தம் எட்டு பக்கங்களுக்கு வந்த அந்த முன்னுரை ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல. இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து அறுவது வாரங்கள் கதை விறுவிறுப்பாக சென்றது. கதை முடிந்த பின்னர் ஒரு முடிவுரையை எழுதி சில விளக்கங்களையும் அளித்தார் கருணாநிதி. ஆக மொத்தம் அறுபத்தி இரண்டு வாரங்கள் வந்த இந்த பொன்னர் சங்கர் தொடர் சிறந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை கதை முடிந்த பின்னர் வந்த வாசகர் கடிதங்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த கதையானது வேறெந்த பதிப்பகம் மூலமாக தனி புத்தகமாக வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்த வாசகர்கள் யாரேனும் பின்னூட்டங்கள் மூலம் தெரிவியுங்களேன்.
முன்னுரை - நுழைவாயில்: முன்சொன்னது போல, கலைஞர் அவர்கள் ஒரு முன்னுரையை இந்த கதையின் முதல் இதழில் வெளியிட்டார். அதனைக்கூட கவித்துவமாக நுழைவாயில் என்று பெயரிட்டு தன்னுடைய கதையின் ஆதாரங்களை பற்றியும் தான் இந்த குறிப்பிட்ட கதையை எழுதியதின் காரணத்தையும் கூறுகிறார். இந்த குறிப்பிட்ட புத்தகத்தினை இப்போது பலராலும் தேடிப்பிடித்து படிக்க இயலாது என்ற காரணத்தினால் முதல் பாகம் முழுமையும் உங்களின் பார்வைக்கு:
தன்னுடைய கண்களை பராமரிக்க அர்ச்சனா என்ன செய்கிறார் போன்ற செய்திகளை விட்டுவிட்டு கதையின் முன்னுரையை மட்டும் படித்து விட்டீர்கள் அல்லவா? முதல் இதழில் படங்கள் அவ்வளவாக இல்லை. ஒரே ஒரு கோட்டோவியம் மட்டுமே இருக்கும். அதுவும் போர்ட்ரெய்ட் போல வரையப்பட்டு இருக்கும். ஆகையால் கோபுலு அவர்களின் ஓவியத்திறனை இதில் அவ்வளவாக காண இயலாது. கதையின் கடைசி பாகத்தில் இருக்கும் ஓவியத்தில் இருக்கும் அந்த நுணுக்கமான டீடய்லிங்'ஐ சற்றே கூர்ந்து பாருங்கள். அவரது திறமைக்கு இது ஒரு சிறிய சான்று.
| குங்குமம் வார இதழ் - பொன்னர் சங்கர் - அண்ணன்மார் கதை - முதல் பகுதி - கதை: கலைஞர் கருணாநிதி - ஓவியங்கள்: கோபுலு |
 |
இந்த கதையை எழுத ஆரம்பித்த உடனேயே பல சர்ச்சைகளும் ஆரம்பித்தன. தவறான புத்தகங்களையும் ஆதாரமில்லாத தகவல்களையும் மேற்கோள் காட்டி கலைஞர் இந்த கதையை எழுதுகிறார் என்று பல கடிதங்களும், புகார்களும் எழ, கலைஞர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விளக்கம் அளித்தார்.
| ஏனோ தானோ என்று எழுதவில்லை அண்ணன்மார் வரலாறு - ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் - கலைஞர் மேற்கொண்ட பயணங்கள் |
 |
இவ்வாறாக பல ஆரம்பகால சர்ச்சைகளுக்கு பிறகு அண்ணன்மார் கதை ஒரு வருடத்திற்கு மேலாக வெற்றியுடன் வெளிவந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்றது.வரலாற்று கதைகளுக்கு வரவேற்ப்பு குறைந்து இருந்த அந்த காலகட்டத்தில் இவ்வாறாக ஒரு வருடம் ஒரு வரலாற்று தொடர்கதை விறுவிறுப்புடன் வெளிவந்தது பாராட்டத்தக்கதே. இந்த ஓவியத்தை பாருங்கள். நீண்ட சடை முடிகளை கொண்டு (வைகிங்குகளை போல), தினவெடுத்த தோள்களுடன் இருக்கும் அந்த வீரனை பாருங்கள். கோபுலு அவர்கள் கேலிச்சித்திரங்கள் மட்டுமில்லாமல் இதுபோல மனதை கவரும் அற்புதமான மூவிங் ஓவியங்களையும் வரைவதில் வல்லவர் என்பது நிரூபணமாகும். (இந்த படத்தை பார்த்தவுடனே நண்பரொருவர் இந்த ஓவியத்தில் இருப்பது கண்டிப்பாக சகோதர-சகோதரி உறவு முறையாளர்கள் என்பதை அடித்து சொன்னார். அது எப்படி கதையை பற்றி தெரியாமல், படிக்காமல் சொல்ல முடிகிறது என்று விசாரித்தால், அவர்கள் அணைத்து இருக்கும் முறையிலேயே அது தெரிகிறது என்று கூறினார்).
| குங்குமம் வார இதழ் - பொன்னர் சங்கர் - அண்ணன்மார் கதை - கடைசி பகுதி - கதை: கலைஞர் கருணாநிதி - ஓவியங்கள்: கோபுலு |
 |
இவ்வாறாக கதையை முடித்தவுடன், அதில் விளக்கமளிக்க வேண்டிய இடங்கள் பல இருப்பதை உணர்ந்த கலைஞர் உடனடியாக ஒரு முடிவுரையை எழுதினர். அதில் கதை முடிந்தவுடன் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களையும் விளக்கினார். அந்த கடைசி பாகத்தின் முழு ஸ்கான் பக்கங்கள் இதோ:
கதை குறித்த சர்ச்சைகள்: மிகவும் பரவலாகவும் சிறப்பாகவும் பேசப்பட்ட இந்த கதையில் பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழாமலில்லை. குறிப்பாக கதையின் போக்கும், ஒரு குறிப்பிட்ட இனத்தினரை பழிக்கும் வகையிலும் மற்றொரு இனத்தாரை உயர்த்தியும் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டது இந்த கதை என்று இன்றளவும் சொல்வோர் உண்டு. கரூரில் இயங்கும் பெரியாரியல் கலை இலக்கிய ஆய்வு மன்றத்தை சார்ந்த வரலாற்று சமூக ஆய்வாளர் திரு.இல.பரணன் அவர்கள் கூற்றுப்படி இந்த கதையின் மூலப்படியாக இருக்கும் பிச்சன் அவர்கள் எழுதியதற்கே வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அதில் செய்துள்ள தவறுகளையே மற்றவர்களும் பின்பற்றி வந்தார் என்று கூறுகிறார். குறிப்பாக பிச்சன் அவர்களின் மூலப்படியில் வேளாளர் இனத்தாரை உயர்வாகவும், வேட்டுவரை தாழ்த்தியும் ஆதாரமின்றி எழுதி இருப்பதை குறிப்பிடுகிறார், மேலும் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த புத்தகமானது சாதி வெறியை தூண்டும் வகையில் இருந்ததால் அப்போதே இந்த புத்தகம் தடை செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு இவர் எழுதியுள்ள பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு ஒரு குறிப்பிடத்தக்க நூலாகும்.
பொன்னர் சங்கர் காமிக்ஸ் தொடர்
தொடர் கதை வடிவில் ஒரு வடத்திற்கு மேலாக வந்து பெருவெற்றி பெற்ற பொன்னர் சங்கர் கதையை தொடர்ந்து 2 வருடங்கள் கழித்து இதே கதை புதிய தலைமுறை வாசகர்களை கவரும் வகையில் முழுக்க முழுக்க சித்திரக்கதை வடிவில் (காமிக்ஸ்) வருவதாக விளம்பரம் செய்யப்பட்டவுடன் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. தொடர் கதை வெளிவந்த போது கோபுலு அவர்களின் கோட்டோவியங்கள் கதைக்கு உயிரூட்டின. அதே எதிர்பார்ப்பில் வாசகர்கள் இருந்தனர். இந்த சித்திரக்கதைக்கு ஓவியங்களை வரையப்போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கரோ என்ற புதிய ஓவியரின் (காமிக்ஸ் ரசிகர்களுக்கு புதியவர்) கைவண்ணத்தில் இந்த சித்திரத்தொடர்கதை ஆரம்பித்தது. நாற்பது வாரங்கள் வந்த இந்த கதை மீள்வாசிப்பில் மிகவும் சிறப்பாக தோன்றுகிறது. மொத்தம் இருநூறு பக்கங்கள் கொண்ட இந்த கதை (ஒவ்வொரு வாரமும் ஐந்து பக்கங்கள்) 80 பக்கங்கள் முழு வண்ணத்திலும், மீதமுள்ள 120 பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் வந்தது.
இந்த காமிக்ஸை ஒரு நூலகர் தொகுத்து பைண்டிங் செய்து வைத்திருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அதனை நான் கையகப்படுதினேன். அப்போது முதல் ஒவ்வொரு முறையும் இந்த கதையை படிக்க முயலும்போதெல்லாம் ஐந்து பாகங்களுக்கு மேல் கதையின் போக்கில் பயணிக்க இயலாமல் போனது. கதையில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருப்பதும், கதையின் ஓட்டம் வேகமாக இருப்பதும் அவற்றிற்கு காரணங்கள் என்றாலும் என்னுடைய சோம்பேறித்தனமும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த கதையை திரைப்பட வடிவில் பார்த்தவுடன் அன்றிரவே புத்தகத்தை எடுத்து படித்து விட்டேன். அப்போது எனக்கு மந்தியப்பன்தான் பிரகாஷ் ராஜ், காளியண்ணன் தான் நெப்போலியன், குன்றுடையான் தான் ஜெயராம் என்று நடிகர்களை கொண்டு பாத்திரங்களை இனம்காண முடிந்தது. மிகவும் சுலபமாக கதையை புரிந்து கொண்டு படித்து விட்டேன். அந்த கதையின் முதல் பாகம் இதோ:
கிட்டதட்ட தொடர் கதையை அப்படியே காமிக்ஸ் வடிவத்திற்கு (எழுத்து வடிவில் இருந்து படங்களிற்கு) மாற்றி இருந்தார்கள். இவ்வாறு நடந்த போது கலைஞர் அவர்கள் அந்த விவகாரங்களில் பங்கேற்றாரா என்பது தெரியவில்லை. [ஏனென்றால் அவ்வாறு செய்வது சாதாரண வேலையல்ல. ஒரு திறமை வாய்ந்த கதாசிரியராலேயே அவ்வாறு செய்ய இயலும். தமிழில் தான் எழுதாத ஒரு கதைக்கு இவ்வாறு காமிக்ஸ் வடிவிற்கு மாற்றியவர் ஒருவர் உண்டென்றால் அவர் நம்ம வாண்டுமாமா தான். தமிழில் கதை: X , படக்கதை வடிவாக்கம்: வாண்டுமாமா, ஓவியங்கள்: Y என்று வந்த கதையை பற்றி பின்னொரு பதிவில் விரிவாக காண்போம்].
மிகவும் திறமையாக எடிட்டிங் செய்யப்பட்டு படக்கதை வடிவில் வந்த இந்த தொடர் சிறந்த வரவேற்ப்பை பெற்றது என்றால் அது வியப்புக்குரியதல்ல. கண்ணைக்கவரும் வண்ணக்கலவையும், சிறப்பான கோணங்களையும் கொண்டு அமைந்த இந்த சித்திர தொடர்கதை இன்றைய இந்த புதிய தலைமுறைக்கு நான் முன்மொழியும் கதைகளில் ஒன்றாகும். கதையின் நாற்பதாவது மற்றும் கடைசி பாகம் இதோ:

பொன்னர் சங்கர் திரைப்படம்: சமீபத்தில் திரைக்கு வந்து 'வெற்றிகரமாக' ஓடிக்கொண்டு இருக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை படம் ரிலீஸ் ஆன இரண்டாம் நாளே பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நண்பர்களுடன் சென்று படத்தை பார்க்க முடிவு செய்தோம். எங்களைப்போன்ற கோயிஞ்சாமிகளின் வழிகாட்டி மட்டும் வருவதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார். இதுநாள் வரை அவர் இந்த படத்தை பார்க்கவில்லை என்று சிறு பறவை சொல்கிறது. ஒரு சிறந்த படத்தை அவர் மிஸ் செய்து விட்டார் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஆமாம் தோழர்களே, ஒரு விறுவிறுப்பான மன்னர் கால (பீரியட் படம்?) தமிழ் படத்தை பார்த்து பல வருடங்களாகிறது. அந்த குறையை பொன்னர் சங்கர் போக்கி விட்டது. 
இந்த காமிக்ஸ் கதையை படித்துவிட்டு மறுபடியும் (சத்தியமாக) இரண்டாம் முறையாக படத்தை பார்த்தபோது ஆச்சர்யம் ஏற்ப்பட்டது. அதாவது சிதிரக்கதையின் கட்டங்கள் எவ்வாறு நகர்கிறதோ அவ்விதமே கதையும் முன்னேறியது. கிட்ட தட்ட இந்த படக்கதை ஒரு ஸ்டோரி போர்ட் ஆகவே உபயோகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் தியாகராஜன் கண்டிப்பாக இந்த காமிக்ஸ் கதையை படித்திருக்க வாய்ப்பிலாத வேளையில் எப்படி இந்த ஒற்றுமை ஏற்பட்டது என்று வியந்தேன். படத்தின் பல காட்சிகள் அப்படியா காமிக்ஸ் கதை நகர்வது போல இருந்தது.
ஆனால் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தையும், நாசர் வேடத்திற்கு அதே லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் வரும் கேண்டால்ப் பாத்திரத்தையும் உபயோகப்படுத்தாமல் இருந்திரக்கலாம். அட, உண்மையிலேயே படத்தின் மத்தியில் (இரண்டு ஹீரோயின்களை காப்பாற்றும் காட்சியில்) வரும் சண்டைக்காட்சிகள் அப்படியே லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போல படத்தின் இரண்டாம் பாகத்தில் வருவதைப்போல இருக்கும். தியாகரஜான் ஒரு கலைரசனை கொண்ட இயக்குனர் (உண்மையிலேயே இப்படி ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சிகளை சமீபத்தில் எந்த படத்திலும் பார்க்கவில்லை). அழகியல் காட்சிகளை மிகவும் திறமையாக வெளிக்கொனருபவர். அவர் இந்த கோ-இன்சிடென்ஸ்'ஐ தவிர்த்து இருக்கலாம்.
அதைப்போலவே இயக்குனர் தியாகராஜன் அவர்கள் ஹீரோயிசம் காண்பிக்க கதையமைப்பில் இருந்து விலகாமல் இருந்திருக்கலாம். உதாரணமாக கலைஞர் எழுதிய கதையில் ஆரம்பத்தில் அந்த இரண்டு ஹீரோயின்களையும் காப்பாற்றுவது உண்மையில் ராஜ் கிரணின் மகனே. பொன்னரும் சங்கரும் காப்பாற்ற முயன்றாலும்கூட முதலையிடமும், மலைப்பாம்பிடமும் அவர்களால் தனித்தே வெற்றி கொள்ள முடியாது. அப்போது ராஜ் கிரணின் மகனே வந்து இவர்களை காப்பாற்றுவார். ஆனால் கதையில் பொன்னரும் சங்கரும் தனித்தே காப்பாற்றும்படி இருக்கும். இதைதவிர கதையின் பல இடங்களில் இப்படி பல சினிமாட்டிக் சுதந்திரத்தை இயக்குனர் கையாண்டிருப்பார். குறிப்பாக படத்தின் இறுதியில் பொன்னர் மட்டுமே உயிரோடு இருப்பார். சங்கர் வீரமரணம் தழுவி இருப்பார். ஆனால் அப்படி காட்டினால் சென்டிமென்ட் அடிப்பட்டு விடும் என்று இருவரையும் உயிருடனே காட்டி இருப்பார் இயக்குனர்.
சன் டிவி - தினகரன் - குங்குமம் நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்: இந்த சித்திரக்கதையானது தமிழிக வரலாற்றில் ஒரு முக்கிய இடம்பெறக்கூடியதாகும். அப்படிப்பட்ட இந்த கதையை பலருக்கும் சென்றடையும் வகையில் ஒரு முழு நீளக்கதையாக மறுபதிப்பு செய்யலாமே? கண்டிப்பாக குங்குமம் நூலகத்திலேயே இந்த கதையின் பிரதிகள் இருக்கும். அப்படி இல்லைஎன்றாளும்கூட என்னைப்போன்ற பல வாசகர்களிடம் கண்டிப்பாக இருக்கும். எவ்வளவோ புத்தகங்களை மறுபதிப்பு செய்கிறார்கள். இது மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் குங்குமம் ஸ்டாலில் சந்தா விண்ணப்பங்களும், கடைசி இரண்டு மூன்று இதழ்களுமே விற்பனைக்கு இருக்கும். இது போன்ற அறிய புத்தகங்களை மறுபதிப்பு செய்து அங்கே விற்கலாமே?