Pages

Tuesday, June 17, 2014

25 VanduMama (21 April 1925 - 12 June 2014) வாண்டுதேசத்தின் மாமன்னர்

Dear ComiRades,

Welcome back to TCU. As Yours truly was gearing up for the launch of “TCU Books” publication, a shocking news was awaiting: Vandu Mama: Greatest Ever Story Teller in Tamil For Children of All Ages passed away. Here is a tribute paid by Yours truly & this appeared in The Hindu (Tamil Daily news paper) on Sunday, 15th June 2014.

வாண்டுதேசத்தின் மாமன்னர்

தமிழர்கள் பலரது இளம்பிராயக் கற்பனைகளை, சாகசக் கனவுகளை வார்த்தைகளால் வடிவமைத்தவர் வாண்டுமாமா (21 ஏப்ரல் 1925 - 12 ஜூன் 2014). சித்திரக் கதைகள், சிறுவர் நாவல்கள், சாகசக் கதைகள் என்று பலதளங்களில் இயங்கியவர் அவர். படிப்பவர்களைச் சுண்டியிழுக்கும் வசீகரம் கொண்டது அவருடைய எழுத்து நடை. சூரியனுக்குக் கீழே உள்ள எதைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதக் கூடிய வித்தைக்காரர் அவர். அறிவியல் என்றாலே காத தூரம் ஓடிய மாணவர்கள்கூட ரசித்துப் படிக்கும் வகையில் அறிவியல் தொடர்பான கட்டுரைகளையும் குறிப்புகளையும் சுவையுடன் வழங்கியது அவரது தனிச் சிறப்பு. அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் குடிமக்கள் அனைவரும் குழந்தைகளாகத்தான் இருந்தனர். குறைந்தபட்சம் குழந்தை மனது கொண்டவர்களாக!

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 15th June 2014 Page 1 Headlines for VM Story

புதுக்கோட்டை அருகில் இருக்கும் அரிமழம் கிராமத்தில் 1925-ம் ஆண்டு பிறந்த வி.கிருஷ்ண மூர்த்திதான், பின்னாளில் வாண்டுமாமா ஆனார். திருச்சி லால்குடி திண்ணியம் கிராமத்தில் வளர்ந்த இவர், பாரதி என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். சென்னையில் நடந்த கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது.

கலைமகள் இதழில் வெளியான குல்ருக் என்ற கதையின் மூலம் பள்ளியில் படிக்கும்போதே எழுத்தாளர் ஆகிவிட்டார். குடும்பச் சூழ்நிலை காரண மாகக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் அப்போதே திருச்சியில் இருந்த பல நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள், பிரசுரகர்த்தர்களின் புத்தக அட்டை, உள்பக்கப் படங்கள் வரையும் கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட்டாகச் செயல்பட்டார். சென்னையில் சில காலம் இருந்துவிட்டு, திருச்சிக்கே திரும்பி சிவாஜி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் பின்னர், வானவில் என்ற பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார். இந்த வானவில்தான் வாண்டுமாமா உருவாக்கிய முதல் சிறுவர் இதழ். அதன் பின்னர் மின்னல், சிவாஜி சிறுவர் மலர், கிண்கிணி, அரு. இராமநாதனின் பத்திரிகைகளான கலைமணி, காதல் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார்.

அரு. இராமநாதனின் காதல் பத்திரிகை சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, இவரும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் அரு. இராமநாதனுடன் ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தால் மறுபடியும் திருச்சிக்கே திரும்பி ஒரு பள்ளியில் நூலகராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், சென்னைக்குத் திரும்பி விகடன், குமுதம் என்று பல பத்திரிகைகளில் முயன்று, பிறகு கல்கி அதிபர் சதாசிவத்தைச் சந்தித்தார். இவரது திறமையைக் கண்டுவியந்த சதாசிவம், உடனடியாக வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்.

விற்பனைப் பிரிவு குமாஸ்தாவாகத்தான் கல்கியில் சேர்ந்தார். ஆனால், வெகுவிரைவில் ஆசிரியர் குழுவில் சேர்க்கப்பட்டார். பின்னர், சிறுவர் விருந்து என்ற பல்சுவைப் பகுதியைக் கல்கியில் கொண்டுவந்தார். பல ஆண்டுகள் கல்கியில் பல சித்திரக் கதைகளையும், சிறுவர் கதைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார். அப்போது, கல்கி நிறுவனம், கோகுலம் என்ற சிறுவர் பத்திரிகையை ஆரம்பித்தது. சிறுவர் இலக்கியப் பத்திரிகைகளில் இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. அதுவரை ஒரு சிறிய வட்டத்திலேயே நடத்தப்பட்டுவந்த சிறுவர் பத்திரிகை, முதன்முறையாக ஒரு பெரிய நிறுவனத்தால் இந்தியாவெங்கும் சிறப்பாக வெளியிடப்பட்டது.

கோகுலம் இதழில்தான் வாண்டுமாமா தன்னுடைய புகழ்பெற்ற கதாபாத்திரங்களாகிய பலே பாலு, சமத்து சாரு போன்றவற்றை உருவாக் கினார். தொழிலாளர் பிரச்சினை காரணமாக கல்கி இதழ் வெளிவருவது நின்றபோது, குங்குமம் பத்திரிகையில் சேர்ந்தார். மறுபடியும் கல்கி-கோகுலம், பின்னர் தினமணிக்கதிர் என்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவர், பணி ஓய்வுபெற்ற பின்னர் கேரளத்தின் பூம்பட்டா நிறுவனம் வெளியிட்ட பூந்தளிர் இதழின் நிர்வாக ஆசிரியராகச் சேர்ந்தார். பூந்தளிர் அமர் சித்திரக் கதை, பைகோ கிளாசிக்ஸ் போன்ற இதழ்களையும் திறம்பட நிர்வகித்தார் வாண்டுமாமா. இவற்றில் வெளிவந்த கதைகளை மொழிமாற்றம் செய்ததும் இவரே. அந்த இதழ்களின் நிறுவனர் தினேஷ் பையின் மறைவுக்குப் பின்னர், பூந்தளிரும் நின்றுபோனது. பிற்காலத்தில் வாண்டுமாமாவே சொந்தமாகப் பூந்தளிரை வெளியிட்டார்.

புற்றுநோய் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாகச் சரியாகப் பேச முடியாமல் இருந்தார் வாண்டுமாமா. அவரது எண்ணங்களை சைகைகள் மூலமே புரிந்துகொண்டு செயல்பட்ட அவருடைய மனைவி சாந்தா, கடந்த ஆண்டு மறைந்த பின்னர், மனதளவில் மிகவும் தளர்ந்திருந்த வாண்டுமாமா வியாழக்கிழமை இரவு காலமானார். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த வாண்டுமாமா, பொருளாதாரரீதியான சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது ஒரு துயரம். வாண்டுமாமாவின் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது என்பது சம்பிரதாயமான வாக்கியம் அல்ல. நம்முள் உயிர்ப்புடன் இருக்கும் இளம்பிராயத்தின் விசும்பல் அது.

பின்குறிப்பு: வாண்டுமாமாவின் சித்திரக் கதைகளை ‘தமிழ் காமிக்ஸ் உலகம்’ காப்புரிமை பெற்று விரைவில் வெளியிடவிருக்கிறது.

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 15th June 2014 Page 8 VanduMama RIP News

வாண்டுமாமா விட்டுச்சென்ற செய்தி:

வாழ்க்கைதான் என்னைக் குழந்தை எழுத்தாளனாக ஆக்கியது. ஓவியனாக வேண்டும் என்றுதான் இளம் வயதில் ஆசைப்பட்டேன். அதுதான் என் கனவாக இருந்தது. அதே கனவுடன்தான் பத்திரிகைத் துறையிலும் நுழைந்தேன்.

வானவில் பத்திரிகைக்காகத்தான் நான் வாண்டுமாமா ஆனேன்.

குழந்தைகள் இலக்கியம் என்பது ஒரு தனி உலகம். பெரியவர்களுக்கான உலகின் தர்க்க நியாயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது அது. குழந்தை எழுத்தாளன் ஒருவகையில் தானே குழந்தையாகிவிடுகிறான். காலமெல்லாம் குழந்தையாக இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்!

இந்தக் காலக் குழந்தைகள் பாவம் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர்களுக்கென்று எழுத யாருமே இல்லையே. நவீன சாதனங்களின் வளர்ச்சி வரவேற்கக் கூடியதுதான். எனினும், அவைதான் வாழ்க்கை என்றால் அது என்ன வாழ்க்கை?

உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். படிக்கச் சொல்லுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கிக்கொடுங்கள்.

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 15th June 2014 Page 8 VanduMama RIP News Box News After the tribute got published in the newspaper, many letters also reached and got published in the letters to the editor page. You can also contribute by mailing to editpage@thehindutamil.co.in  Here are some:

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 16th June 2014 Page 6 VanduMama RIP News Letters to the Editor

As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

25 comments:

  1. " பூந்தளிர் " ரசிகன் ஆன என்னை போல பலருக்கும் அவரின் மறைவு அதிர்ச்சி தான் . எங்களுக்கும் மட்டுமல்ல " குழந்தை இலக்கியத்திற்கு " ம் ஏற்பட்ட பெரும் இழப்பு .தங்கள் இணையத்தில் அவர் மீண்டு ( ம் ) வருவதாக படித்த நினைவு .ஆனால் அதற்குள் " காலன் " அவசர பட்டு விட்டான் .

    அவரின் படைப்புகள் " தமிழ் காமிக்ஸ் உலகம் " மூலம் மீள்வதில் மிகுந்த மகிழ்ச்சி .ஒரே ஒரு சந்தேகம் சார் .மீண்டும் அவரின் படைப்பு வருவது "புத்தக பதிப்பில் "தானே ?

    ReplyDelete
  2. அருமை சார்.

    அப்படியே போன வாரம் வெளிவந்த லக்கிலூக் கட்டுரையையும் இங்கே பதிவாக இடுங்கள்.

    ReplyDelete
  3. வாண்டுமாமா RIP!

    ReplyDelete
  4. சார்,

    ஒரு சிறு சந்தேகம்: பைகோ க்ளாசிக்ஸ் மற்றும் பூந்தளிர் அமர் சித்திரக்கதை இதழ்களை மொழி பெயர்த்தவர் வாண்டுமாமா என்று சொல்லி இருக்கிறீர்கள்.

    ஆனால் அந்த இதழ்களில் எங்கேயுமே இவரது பெயர் வரவில்லையே? ஏன்?

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் பெயர் மட்டும்தான் போடுவார்கள். மொழி பெயர்தவர்கள் பெயரெல்லாம் பொடமாட்டார்கள்

      Delete
  5. எனது சிறுவர் பருவம் பூங்தளிர், கோகுலம்,அம்புலிமாமா, ரத்னபாலா இவைகளுடந்தான் கழிந்தது. பூந்தளிர் என்றாலே நினைவுக்கு வருபவர் வாண்டுமாமா ! அவருடைய ஆன்மா இறைவனடியில் இளைப்பாற வேண்டுகிறேன்!

    ReplyDelete
  6. என்னுடைய பள்ளி நாட்களில் நான் பாடப்புத்தகத்தை விட அதிகமாக படித்தது பூந்தளிர் தான்.

    ஒருமுறை பள்ளியில் பாடப்புத்தகத்தின் நடுவே பூந்தளிர் வைத்து படிக்கும்போது மாட்டிக்கொண்டு, பிறகு என்னை ஒரு பிரிவு முழுக்க முட்டிபோட வைத்தார்கள். அதெல்லாம் தனி கதை.

    அப்போது பாலமித்ரா, அம்புலிமாமா, ரத்னபாலா, என்று இன்னும் நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் வரும்.

    ஸ்கூலில் நண்பன் ஒருவன் டின்கிள் வைத்து பந்தா செய்தபோது அவனிடம் பூந்தலிர் காட்டி அசத்தி, ஒரு ஹீரோவாக இருந்த நாட்கள் எல்லாம்..... ஹூம் ஒரு கனவு போல தெரிகிறது.

    நினைவுகளை மீட்டெடுத்த உங்கள் கட்டுரைக்கு நன்ற்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு. என்னுடைய சிறுவயது நினைவுகளை அப்படியே மருபடியும் பார்க்கவைத்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  8. மனோகரன், காரைக்கால்Tuesday, June 17, 2014 at 8:34:00 PM GMT+5:30

    விஸ்வா,

    உங்கள் தொலைபேசி எண்னுக்கு அழைப்பு விடுத்தேன். நீங்கள் ஏற்க்கவில்லை.

    என் பெயர் மனோகரன், உங்களை இந்த முறை சென்னை ராயப்பேட்டையில் நடந்த புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். இந்த கட்டுரையை படித்தவுடன் உங்கள் தொலைபேசி எணனை தேடி அழைத்தேன்.


    வாண்டுமாமா அவர்கள் தமிழர்களின் வாழ்வுடன் கலந்த ஒரு மகோன்னத பிம்பம். அவருக்கு என்னுடைய இறுதி மரியாதை.

    ReplyDelete
  9. வாண்டு மாமா பல இதழ்களில் பணி புரிந்திருந்தாலும் அவருடைய அழியாத அடையாளம் பூந்தளிர் தான். அவர் மறைந்தாலும் அவருடைய படைப்புகளில் இன்னமும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். என்றும் மறக்க இயலா மனிதர். அவரைப் பற்றிய தொகுப்பு அருமை.

    ReplyDelete
  10. Good one Viswa!

    // அவர் மறைந்தாலும் அவருடைய படைப்புகளில் இன்னமும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். //
    +1 True.

    ReplyDelete
  11. விஸ்வா, தங்களின் புள்ளி விபரம்கள் பிரமிக்க வைக்கின்றன, நீங்கள் இருக்கும் மீடியா துறைக்கு மிகவும் முக்கியமானது என நினைக்கிறன். சிறு வயதில் படித்த நமது காமிக்ஸ் நினைவில் இல்லை, அவைகளின் அட்டை படம்களை பார்த்த பின்புதான் ஆம் இந்த கதையை நாம் படித்து இருக்கிறோம் என்பது நினைவில் வரும்.

    தங்கள் பதிவு அருமை. தொடரட்டும் உங்கள் ராஜாங்கம்.

    ReplyDelete
  12. வாண்டு தேசத்தின் மாமன்னருக்கு அஞ்சலி.அவரின் பல படைப்புகளை படித்திருக்கிறேன் எனினும் மலைக்குகை மர்மம் எனும் கதை என்னுள் பால்ய நினைவுகளை கிளர்த்தும் சிறப்பை உடையது.நன்றி.

    ReplyDelete
  13. Excellent post with lot of information. Glad to note that you are going to publish his stories and I will be the first person to buy them.

    ReplyDelete
  14. அருணாச்சலம்Wednesday, June 18, 2014 at 6:54:00 PM GMT+5:30

    வாண்டுமாமாவின் நினைவு நம்மை விட்டு அகலாது.

    நண்பர் விச்வா, நீங்கள் வெளியிட இருக்கும் காமிக்ஸ் குறித்து கொஞ்சம் சொல்லலாமே?

    ReplyDelete
  15. அற்புதம்.

    ஒரு கலைஞனை இழந்தபிறகுதான் அவருடைய உன்னம்தமும், அவசியமும் தெரியும்.

    ஈடு இணையற்ற எழுத்தாளர் வாண்டுமாமா.

    அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்,

    வினோத்.

    ReplyDelete
  16. அவர் எழுதிய பிற புத்தகங்களை வெளியிட யாராவது முயற்சி செய்கிறார்களா?

    ReplyDelete
  17. ஐயோ! அப்படியானால் அந்தச் செய்தி உண்மைதானா?

    12ஆம் நாள் இணையத்தில் ஓரிரு பதிவர்கள், வாண்டுமாமா இறந்து விட்டதாகக் கூறி, அவர் பற்றிய தங்கள் பழைய பதிவை மீள்பதிவு செய்திருக்கக் கண்டேன். ஆனால், நம்பவில்லை. இதுவரை பலமுறை அவர் இறந்த விட்டதாகப் படித்திருக்கிறேன். இதுவும் அப்படிப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். வாண்டுமாமா வீட்டுத் தொலைபேசி எண் தெரியும். இதற்கு முன் அவர் மருமகளாரிடமும், துணைவியாரிடமும் பேசியும் இருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு செய்தி தொடர்பாக எப்படிப் பேசுவது? அதனால், தொடர்புகொள்ளவில்லை. ஆனால், இன்று நீங்களே கூறுவதால் அந்தத் துக்கமிகு செய்தி உண்மைதான் என்பதை, அந்த வெகுநாளைய புரளி பலித்துவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்! எனக்கு மிக மிக வருத்தமாக இருக்கிறது!!!

    ReplyDelete
  18. பூந்தளிரில் வாண்டுமாமா தொடராக எழுதிய 'சூட்கேஸ் மர்மம்' போன்ற கதைகளைக் கூட வெளியிடுவீர்கள்தானே?

    ReplyDelete
  19. வாண்டுமாமா ஆத்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  20. பலே பாலுவும் பாட்டிலில் பூதமும் உயிர்

    உள்ளவரை மறக்க இயலாது !

    ReplyDelete
  21. பலே பாலுவும் பாட்டிலில் பூதமும் உயிர்

    உள்ளவரை மறக்க முடியாது

    ReplyDelete
  22. TCU BOOKS லாஞ்ச் ஆகிவிட்டது என ஆதி

    தாமிரா எழுதி இருந்தார் !

    அது பற்றி எழுதுங்களேன் !

    ReplyDelete
  23. பூந்தளிர் கதைகள் மறக்க முடியாது

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails