Pages

Friday, May 03, 2013

30 சுஜாதாவின் காமிக்ஸ் கதைகள் - சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு

டியர் காமிரேட்ஸ்,

இன்று (மே மூன்றாம் தேதி) அமரர் சுஜாதா அவர்களின் பிறந்த நாளாகும். இன்று புதியதாக வந்த லயன் காமிக்ஸ் இதழை பற்றி பதிவிடலாம் என்று இருந்தபோது நண்பர் ஒருவர் காலையிலேயே தொலைபேசியில் அழைத்து சுஜாதாவின் கதைகளைப்பற்றியும் அவரது ஓவிய, காமிக்ஸ் ரசனை குறித்தும் ஒரு பதிவிட முடியுமா? என்று கேட்டார். சுஜாதாவின் தீவிர ரசிகரும், நமது லயன் காமிக்ஸ் ரசிகருமாகிய அவரின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு.

Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition Cover நானறிந்த வரையில் சுஜாதா அவர்களின் கதைகள் இதுவரை மொத்தம் மூன்று காமிக்ஸ் வடிவில் வந்துள்ளன. அவை மூன்றுமே என்னிடம் இருக்கிறது இருந்தது என்பது பெருமை படத்தக்க விஷயமாக கருதுகிறேன். ஆகையால் அவற்றை பற்றி இன்று ஒரு பதிவு இடலாம் என்று சிந்தனை வந்தபோது, கடந்த சென்னை புத்தக திருவிழாவில் விகடன் வெளியிட்ட சுஜாதா சிறப்பு மலரில் வந்த கட்டுரை ஒன்றும் நினைவுக்கு வந்தது. சரி அந்த கட்டுரையையும் இந்த பதிவில் இணைத்து ஒரு முழுமையான பதிவாக்கிவிடுவோம் என்று முடிவெடுத்தேன்.

என் இனிய ஜீனோ: எண்பதுகளின் இறுதியில் தொலைக்கட்சியில் என் இனிய இயந்திரா என்றொரு தொடர் வெளியானது நம்மில் எத்துனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. பூனைக்கண் நடிகைகளில் முதல்வராகிய சிவரஞ்சனி (தெலுங்கில் இவரது பெயர் ஊஹா) ஹீரோயினாக நடித்த இந்த தொடர் சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஜீனோ என்று கூட அவர் எழுதினர்.

தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் வாசுகி என்று ஒரு மாதமிருமுறை இதழ் வந்துக்கொண்டு இருந்தது. இந்தியா டுடே அளவில் மிகவும் அருமையான பேப்பர் குவாலிட்டியில் அற்புதமான கட்டுரைகளையும், கதைகளையும் தாங்கி வந்துக்கொண்டு இருந்த அந்த இதழின் ஒரு தீபாவளி சிறப்பு மலரில் (1993 Dec) வந்த தொடர் கதை தான் என் இனிய ஜீனோ. சரி, மற்றுமொரு சுஜாதா தொடர் கதைதானே? இதில் என்ன சிறப்பு என்று யோசிக்க வேண்டாம். ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் முழு வண்ணத்தில் காமிக்ஸ் வடிவில் வந்ததே இந்த தொடர் கதையின் சிறப்பு அம்சம்.

கடைசியில் ஒரு வாரம் மட்டும் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் கதை மொத்தம் பதிமூன்று அத்தியாயங்கள் வந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடர் கதையை இப்போது யாராவது மறுபடியும் ஒரு முழு வெளியீடாக பதிப்பித்தால் அற்புதமாக இருக்கும். கிழக்கு பதிப்பகம் பத்ரி நமது பதிவுகளை படிப்பவர். இதனை கவனிப்பார் என்றே நம்புகிறேன்.

 

Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 01 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 02
Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 03 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 01
Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 02 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 03

ப்ரிய சித்ரா மாத இதழ் - நைலான் கயிறு: நைலான் கயிறு நாவலானது சுஜாதாவின் நாவல்களில் மிகவும் முக்கியமானது ஆகும். சுஜாதாவின் முதல் நாவலான இந்த கதை  1968ல் குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதப்பட்டு 14 வாரங்கள் வெளிவந்தது.இந்த கதையை பற்றி ஏற்கனவே நமது ஈரோடு ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டு இருக்கிறார். இருப்பினும் அந்த கதையை பற்றிய முழுமையான விவரங்களை அளிப்பது இந்த பதிவின் சிறப்பாகும் என்பதால் இங்கே இடம்பெறுகிறது.

எழுத்தாளர் இந்துமதி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்துக்கொண்டு இருந்த மாதமிருமுறை இதழ் அஸ்வினி. எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்துக்கொண்டு இருந்த இந்த இதழின் வெளியீட்டாளர் கீதா வெங்கட்ராமன். எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த காமிக்ஸ் பேரலையில் இவர்களும் கவரப்பட்டு ஒரு சித்திரக்கதை மாத இதழை ஆரம்பித்தனர். அதன் பெயர் ப்ரியசித்ரா என்பதாகும்.

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களை சித்திரக்கதை வடிவில் கொண்டு வருவதே இவர்களின் எண்ணம். ப்ரியசித்ரா வெளியிட்ட  இதழ்கள் பின்வருமாறு:

  • நைலான் கயிறு - சுஜாதா (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்) November 1983.
  • ஹைவே 117 - புஷ்பா தங்கதுரை (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்)
  • மறுபடியும் தேவகி ரா.கி ரங்கராஜன் (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்)

சரியான அளவில் வரவேற்ப்பு இல்லாததாலும் வேறு சில காரணங்களாலும் ப்ரியசித்ரா இதழ் மூன்றாவது இதழுடனே முடிவடைந்தது. இதற்க்கு பிறகு அடுத்த இதழ்கள் வரவில்லை என்பது பதிப்பாளர் அளித்த தகவல்.ஆகவே இந்த இதழின் முதல் பக்கம் உங்களின் பார்வைக்கு (என்னுடைய புத்தகம் நண்பர் ஒருவரால் கபளீகரம் செய்யப்பட்டதால் நண்பர் ஸ்டாலினின் ஸ்கான்கள்-மேம்படுத்தப்பட்டு-இங்கே அளிக்கப்படுகிறது. வெகு விரைவில் அந்த -முன்னாள்-நண்பரிடமிருந்து என்னுடைய புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டவுடன் புதியதொரு பதிவில் அட்டைப்படங்கள் மற்றும் பல சுவையான தகவல்களுடன் வெளியாகும்).

 

Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru 1st Page Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru Last Page
Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru 1st Page copy Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru Last Page

இந்த ப்ரிய சித்ரா வெளியான அதே சமயத்தில் இதே ஐடியாவில் வேறொரு பதிப்பகமும் புத்தகங்களை வெளியிட்டது. அவற்றில் பெரும்பாலும் நமது ஆஸ்தான ஓவியர் செல்லம் வரைந்தார் என்பது சிறப்பு தகவல் அந்த பதிப்பகத்தின் முதல் சித்திரக்கதை எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் மூடுபனி. அந்த காமிக்ஸ் இதழ் என்ன என்பதை கமென்ட்டுகளின் மூலம் தெரிவிப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு காத்திருக்கிறது .

சுஜாதா அவர்களை பற்றி ஓவியர் ஜெயராஜ் - விகடன் சுஜாதா மலர்: சென்ற சென்னை புத்தக திருவிழாவில் ஆனந்தவிகடன் வெளியீடான சுஜாதா மலரில் இரண்டே இரண்டு கட்டுரைகள் மட்டுமே ஒரளவுக்கு என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதில் முதலாவது சுஜாதாவின் நாவல்களை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்த ஓவியர் ஜெயராஜின் நினைவு பின்னல்களை கொண்ட இந்த கட்டுரை.

திடீரென்று இந்த பதிவு இடப்படுவதால் வேறு சில விஷயங்களை இங்கே அரங்கேற்ற முடியவில்லை. விரைவில் நானும் சுஜாதா அவர்களை பற்றிய ஒரு முழுநீள பதிவினை இடுகிறேன். அதில் அவர் கைப்பட எழுதி எனக்கு அளித்த புத்தகம் மற்றும் அவரை நான் சந்தித்த சுவையான சம்பவம் பற்றியும் எழுதுகிறேன். அதுவரையில் இந்த பதிவில் ஜெயராஜ் அவர்களின் நினைவு நாடாக்களை சுழலவிட்டு அவற்றை ரசிப்போம்.

Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 03 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 04
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 05 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 06

சுஜாதாவுக்கு பிடித்த கார்ட்டூன்: சுஜாதா ஒரு மாஸ்டர் என்பது அவரை படித்த அனைவருக்கும் தெரியும் அவர் காமிக்ஸ் பற்றிய ஒரு ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. ஓவியங்களையும், கார்ட்டூன்களையும் அவர் ரசித்தவர். அவருடைய விருப்பமான கார்டூன் பற்றி இந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவதால் இந்த கட்டுரையும் இங்கே இடம் பிடிக்கிறது.

Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 02

சென்ற இதழில் பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னமும் சரியான பதில் வராததால் ஒரு மறு ஒளிபரப்பு:

உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய போட்டி: செக்ஸ்டன் ப்ளேக் கதைகள் (அதாவது வாலியண்ட் இதழில் வந்த கதைகள்) ஒரு குறிப்பிட்ட காமிக்ஸ் ஹீரோவின் கதைகளுடன் "எதேச்சையாக" பொருந்தி இருக்கும். அந்த மற்ற ஹீரோவின் கதையும் தமிழில் வந்துள்ளது. அதனைப்பற்றி நமது முத்து விசிறி அவர்களும் பதிவிட்டுள்ளார்.

  • அந்த மற்றொரு ஹீரோ யார்?

  • அவரது கதைகளுக்கும் செக்ஸ்டன் ப்ளேக் கதைகளுக்கும் என்ன ஒற்றுமை?

  • அந்த மற்றொரு ஹீரோவின் கதை எந்த காமிக்ஸில் வந்தது?

இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நபர்களுக்கு நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் இருந்து A4 சைசில் வெளிவந்த ஆங்கில காமிக்ஸ் இதழ் ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

30 comments:

  1. நாந்தான் முதலில் கமெண்ட் இடுகிறேனோ?

    அமரர் சுஜாதாவுக்கு சிறப்பான மரியாதை தரும் விதத்தில் இருக்கிறது உங்கள் பதிவு.

    ராஜேஷ் கே

    ReplyDelete
    Replies
    1. ராஜேஷ் கே,

      வருகைக்கு நன்றி. ஆனால் லிமட் உங்களை முந்திக்கொண்டு விட்டார்.

      ஏதோ என்னால் ஆனா ஒரு சிறு காணிக்கை

      Delete
  2. தெரியாத பல தகவல்கள் விஸ்வா நன்றி....அப்படியே கதைகளை முழுவதாக தந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி லிமட்,

      முழு கதைகளையும் பதிவிட ஆசையே. ஆனால் அப்படி செய்ய நமது காப்பிரைட் சட்டம் இடம் கொடுக்காது.

      கொஞ்சம் பொறுங்கள், நேற்றைய இந்த பதிவை பார்த்துவிட்டு ஒரு பப்ளிஷர் இதனை ஒரு புத்தகமாக வெளியிட முன்வந்து இருக்கிறார். முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்.

      Delete
  3. சுவாரசியமான பதிவு.. சுஜாதா நவீன தமிழ் எழுத்தாக்கங்களின் முன்னோடி என்பது உறுதி.. அவர் காமிக்ஸ் வடிவிலும் கதை எழுதியிருக்கிறார் என்பது நல்ல செய்தி.. இவை புத்தக வடிவில் யாராவது பதிப்பித்திருந்தால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பொறுங்கள் விமல். மேலே சொன்ன பதிலை பாருங்கள்.

      காலம் கனியும். நல்லது நடக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார்

      Delete
  4. with no disrespect to jeyaraj, நல்லதொரு காமிக்ஸ் கதைகேற்ற ஓவியரை கொண்டு வரையப்பட்டு இருந்தால் இந்த கதைகள் சிறப்பான வெற்றி பெற்று இருக்குமோ என்னவோ? குறிப்பாக என் இனிய ஜீனோ ஓவியங்களும் வண்ணக் கலவையும் சுமாரிலும் சுமார் ராகத்தையே சார்ந்தவை.

    இங்குள்ள ஓவியர்கள் அட்டைப்படங்கள் வரைவதற்கும், நாவலில் ஓரிரு பக்கங்கள் வரைவதற்கும் மட்டுமே டியூன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை சொல்லை குற்றமில்லை. நல்ல ஓவியர்களை வேலை வாங்க எடிட்டர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் தனி திறமை வேண்டும்.

    குமாரவேல்.

    ReplyDelete
  5. with no disrespect to jeyaraj, நல்லதொரு காமிக்ஸ் கதைகேற்ற ஓவியரை கொண்டு வரையப்பட்டு இருந்தால் இந்த கதைகள் சிறப்பான வெற்றி பெற்று இருக்குமோ என்னவோ? குறிப்பாக என் இனிய ஜீனோ ஓவியங்களும் வண்ணக் கலவையும் சுமாரிலும் சுமார் ராகத்தையே சார்ந்தவை.

    இங்குள்ள ஓவியர்கள் அட்டைப்படங்கள் வரைவதற்கும், நாவலில் ஓரிரு பக்கங்கள் வரைவதற்கும் மட்டுமே டியூன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை சொல்லை குற்றமில்லை. நல்ல ஓவியர்களை வேலை வாங்க எடிட்டர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் தனி திறமை வேண்டும்.

    குமாரவேல்.

    ReplyDelete
    Replies
    1. குமாரவேல்

      ஒரு ஜானர் படம் ஹிட்டானால் அதே மாதிரி தொடர்ந்து பல படங்கள் வந்து நம்மை சோதிப்பது போல, தமிழில் காமிக்ஸ் என்பது எழுபதுகளின் பிற்க்காலதிலும் எண்பதுகளின் முற்பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வந்ததின் விளைவே இவை. அயல்நாட்டு காமிக்ஸ் சிறப்பாக விற்பனையாவதை கண்டு, நாமும் காமிக்ஸ் வெளியிடலாம் என்று சூடு போட்டுக்கொண்டதின் சாட்சிகள் இவை.

      இந்த கதைகளை சிறப்பாக ஃகிராபிக் நாவல் என்று கொண்டு வரலாம். அதற்க்கு சிரத்தையும், நேரமும், காமிக்ஸ் மீது காதலும் கொண்டவர்களால் மட்டுமே இயலும். நல்ல ஓவியனாக இருந்தாலும், கதையின் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு, அது யாருக்கு போய் சேரப்போகிறது என்பதை மனதில் கொண்டு வரைந்தால் மட்டுமே அவை முழுமை அடையும்.

      சமீபத்தில் (மார்ச் மாத) ஆனந்த விகடனில் நண்பர் பவா செல்லதுரை எழுதிய கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஓவியம் வரைந்து இருந்தார் நண்பரும், ஓவியருமான ஷ்யாம் இதற்க்கு முழு முதல் காரணம் அந்த புத்தகத்தின் எடிட்டரே அன்றி வேறு யாருமில்லை.

      ஜெயராஜ் அவர்கள் காமிக்ஸ் கதைக்கு Unfit என்று சொல்லவில்லை. மாறாக இந்த தளத்தில் அவர் Misfit ஆக தெரிவதற்கு காரணம் அந்த புத்தகங்களின் எடிட்டர்களே.

      Delete
  6. சுஜாதா . . தமிழ் எழுத்துலகின் முதல்வன் . .நினைவூட்டலக்கும் ,தகவல்களுக்கும் நன்றி விஸ்வா . .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி யஷ்வந்த்.

      சுஜாதா ஒரு மாஸ்டர், Without Doubt.

      Delete
  7. சுஜாதாவின் கதைகளையும் கட்டுரைகளையும் கடந்த முப்பது ஆண்டுகளாக வாசித்து வருபவன் நான். எனக்கே கூட இந்த சித்திர கதைகளை பற்றிய விவரம் தெரியாது. தகவல் களஞ்சியமாக இந்த பதிவை பார்க்கிறேன்.


    ReplyDelete
    Replies
    1. நன்றி தேசிகன் சார். உங்களது வருகையால் இந்த தளம் பெருமை அடைந்தது

      Delete
  8. வாசிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.. படக்கதைகளில் கூட கல்க்கியிருக்கிறாரே? படக்கதைகளாக வந்தவற்றை தான் நாவலாக மாற்றினார்களா? நான் இவை அனைத்தும் தொடர் கதைகளாக வந்தவை என இப்போது வரை நினைத்துக்கொண்டிருந்தேன்.. இந்தப்பதிவுக்கு மிக்க மிக்க நன்றி சார்.. இன்னும் கொஞ்ச நாள் சுஜாதா இருந்திருக்கலாம் நம்மோடு.. நீங்கள் எப்போது சிவகாசிக்கு வருகிறீர்கள்? rammars06@gmail.com இந்த ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்..

    ReplyDelete
    Replies
    1. ராம் குமார்,

      வருகைக்கு நன்றி.

      நாவலாக வந்த கதைகளையே பின்னாளில் காமிக்ஸ் வடிவில் அளித்தார்கள்.

      சுஜாதாவின் எழுத்துக்கள் பெற்ற வெற்றிக்கு தளம் எது என்பது தேவையே இல்லை என்பது என் கருத்து. கதை, கட்டுரை, காமிக்ஸ் கதை எதுவாக இருந்தாலும் வாத்யார், வாத்யார்தான்.

      Delete
  9. சுஜாதாவின் சில கதைகள் காமிக்ஸ் வடிவில் வந்தது பெரிய அளவில் வெற்றி பெறாதது எல்லாம் என் நினைவில் உள்ளது.அதற்கு காரணம் நம் தமிழில் காமிக்ஸ் பற்றிய சரியான புரிதல் ஏதும் இல்லாததே. மேலும் திரு குமாரவேல் அவர்கள் சொன்னது போன்று காமிக்ஸ் கதைகளுக்கு ஓவியம் வரைவது ஒரு கலை. அது நம்மூர் ஓவியர்களிடம் அதிக அளவில் இல்லை என்பது உண்மையே. ஜெயராஜ் ராமு போன்ற ஓவியர்கள் கதைகளுக்கு படங்கள் நன்றாக வரைந்தாலும் காமிக்ஸ் என்ற முயற்சிக்கு பொருத்தமில்லாதவர்கள். ஐரோப்பிய காமிக்ஸ்களில் கதையின் மாந்தர்களை விட பின்புலத்தை (background art) துல்லியமாக வரைந்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியாக சொன்னீர்கள் காரிகன்.

      இந்த கதைகளின் தோல்விக்கு அந்த புத்தகங்களின் எடிட்டர்களும் ஒரு காரணம்.

      Delete
  10. நான் கூட மே 3 அன்று ஒரு பதிவிடலாம் என்று இருந்தேன், வார்த்தைகள் கைகூட வில்லை விட்டுவிட்டேன்.. மிக அருமையான பதிவு, அறிந்து கொண்ட அனைத்துமே புதிய தகவல்கள்...

    //என் இனிய ஜீனோ:// என் இனிய இயந்திரா தானே விஸ்வா,காமிக்ஸாக வரும் பொழுது என் இனிய ஜீனோ என்ற பெயரில் தான் பதிபித்தார்களா? புதிய தகவல் எனக்கு
    அட நைலான் கயிறுகூட காமிக்சாக மாற்றப்பட்டுள்ளதா..கிரேட்

    தங்களைத் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா

    ReplyDelete
    Replies
    1. சீனு,

      வருகைக்கும், கமெண்ட்டுக்கும் நன்றி.

      என் இனிய இயந்திரா நாவலின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜீனோ வெளி வந்தது. அதன் சுமாரான வரவேர்ப்பினால் இந்த காமிக்ஸ் கதை வந்தது.

      ஆகையால் என் இனிய இயந்திராவின் அடுத்த கட்ட முயற்சியின் விளைவு இந்த என் இனிய ஜீனோ என்று சொல்லலாம்.

      உங்களின் தொடருதலால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete
  11. அழகான மலரும் நினைவுகள் ...

    அப்புறம் சார் உங்கள் பரிசுக்கான வினாவிற்கு இம்முறையும் பதில் கிடைக்கா விட்டால் அடுத்த பதிவில் உங்கள் பதிலையும் ,இந்த யோசனையை சொன்ன நண்பருக்கு பரிசையும் அனுப்பி விடுங்கள் .:-)

    ReplyDelete
    Replies
    1. பரணி சார்,

      கண்டிப்பாக இந்த ஞாயிறு வரும் பதிவில் பதில் உண்டு. அயல் நாட்டு நண்பர் ஒருவர் கடைசியாக ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறார்.அதற்காகவே இந்த வெயிட்டிங்.

      Delete
  12. வாத்தியாரை பற்றி நல்ல பல தகவல்கள். திரும்பவும் ஜீனோ கதை காமிக் புக் ஆகா வந்தால் சூப்பர்

    ReplyDelete
  13. நைலான் கயிறு ஜெ.வரைந்த சித்திரக்கதை புத்தகத்தை நானும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன். காலவெள்ளத்தில் எங்கோ தொலைந்து விட்டது. மிக வருத்தத்துடன் இன்னும் தேடிக்கிட்டுதான் இருக்கேன். முழுமையா ஸ்கேன் செய்து அனுப்பினீர்களென்றால் மிகவும் புண்ணியமாப் போகும். ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களுக்கு நன்றி ‌சொல்லிக்கறேன்.

    ReplyDelete
  14. அருமையான பதிவு! //எண்பதுகளின் இறுதியில் தொலைக்கட்சியில் என் இனிய இயந்திரா என்றொரு தொடர் வெளியானது நம்மில் எத்துனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை// எனக்கு நினைவிருக்கிறது! அப்பொழுது எனக்கு வயது ஏழு அல்லது அதற்குள்தான் இருக்கும். அருமையான தொடர் அது!

    ReplyDelete
  15. பிரதர்...! ஞாபகம் வந்துடுச்சு...! ராஜேந்திரகுமாரின் மூடுபனி கதை சித்திரக் கதையாக ‘நரகத்துக்குப் புதியவன்’ என்ற பெயரில் வந்தது. வந்த இதழின் பெயர் ‘அஸ்வினி’ என்பது என் நினைவு. அது மட்டும் கன்ஃபர்ம்டா தெரியல. ரைட்டா?

    ReplyDelete
  16. ராஜேந்திரகுமாரின் மூடுபனி கதை "நரகத்துக்குப் புதியவன்" என்ற பெயரில் ராமு அவர்களின் கைவண்ணத்தில் லீலா காமிக்ஸின் இரண்டாவது சித்திரக்கதையாக வெளிவந்தது. முதல் கதை இந்துமதி அவர்களின் இரவல் கொலைகள்.

    ReplyDelete
  17. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_7197.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  18. சார், பதின்ம வயதுகளில் சுஜாதாவை படித்து வளர்ந்தது பாக்யமே.... உங்களின் பதிவு வழியாக மீண்டும் அந்த நாட்களை நினைவு படுத்தி மகிழ்ச்சியடை வைத்துள்ளீர்கள்... நன்றிகள் சார்!

    // அந்த -முன்னாள்-நண்பரிடமிருந்து என்னுடைய புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டவுடன் // ஹா ஹா....

    ReplyDelete
  19. Great insult to someone the greatest... What is to Cheer about is He is no more...
    It is really embarrassing..
    Pls find some one else... He is so inspiring... Not to some one like u..

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails