Pages

Showing posts with label 2016. Show all posts
Showing posts with label 2016. Show all posts

Sunday, December 31, 2017

3 Frew Comics 1748–The Phantom – Terror’s Mutiny

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Cover 1வேதாளர் (The Phantom) காமிக்ஸ் கதைகள் தினசரி வரும் ’டெய்லி ஸ்ட்ரிப்’ ஆகவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ’சன்டே ஸ்ட்ரிப்’ ஆகவும் உலகமெங்கும் தினசரிகளில் வந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஃப்ரூ என்ற காமிக்ஸ் நிறுவனம் 1948ஆம் ஆண்டுமுதல் இவரது கதைகளை கருப்பு வெள்ளையில் வெளியிட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டிறுதியில் பல சிக்கல்களால் நிற்கும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டுதான் டட்லி ஹொகார்த், ரெனே வொய்ட் மற்றும் க்ளென் ஃபார்ட் ஆகியோர் 2016ல் ஃப்ரூ காமிக்ஸை எடுத்து நடத்த ஆரம்பித்தார்கள்.

இந்த வேதாளரது கதைகளை 2005ஆம் ஆண்டிலிருந்து வரைந்து வந்தவர் ஓவியர் பால் ரயான். இவர் 2016, மார்ச் 77ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது நினைவாக, இந்த ஸ்பெஷல் காமிக்ஸை ஃப்ரூ வெளியிட்டது. வழக்கமாக, வண்ண அட்டைப்படத்துடன் கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் கதைகளை வெளியிடும் ஃப்ரூ, கருப்பு வெள்ளை அட்டையுடன் முழு வண்ணக் காமிக்ஸை முதன்முறையாக ரயானின் நினைவாக வெளியிட்டது.

#KingViswaDailyBookIntro

#KingViswa365Days365Books

31st December 2017 – Frew Comics Phantom – Terror’s Mutiny

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 03அறிமுகம்: முதல் வேதாளர் கிரிஸ்டோபர் வாக்கர், அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸுடன் பணிபுரிந்தவரின் மகன். 20-வது வயதில் அப்பாவுடன் கப்பலில் சென்றபோது கடற்கொள்ளை குழுவால் தாக்கப்பட்டு, கப்பல் மூழ்கிவிடுகிறது. அந்தக் கப்பலில் இருந்து தப்பிய ஒரே ஆள் வாக்கர் என்ற வேதாளர். அவரை பாந்தர் எனும் ஆப்பிரிக்கப் பிக்மி (குள்ள) இனத்தவர் காப்பாற்றுகின்றனர். அப்போது அநீதியையும், கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவதாக உறுதி எடுத்துக்கொள்கிறார் வேதாளர். அதற்குப் பிறகு வாக்கர் என்ற வேதாளரும் அவருடைய வாரிசுகளும் குற்றங்களை எதிர்த்துப் போராடும் நாயகர்களாக வலம் வருகிறார்கள். வெளியுலகைப் பொறுத்தவரையில் வாக்கரும் அவருடைய வாரிசுகளும் ஒரே ஆள் என்றே நம்புகிறார்கள். அதனால் வேதாளர் சாகாவரம் பெற்றவர் போலவும், அவரை கொல்லவே முடியாது என்ற கருத்தும் பரவியுள்ளது. இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் 21-வது வேதாளர். ஹீரோ என்ற குதிரையில்தான் வேதாளர் வருவார், எப்போதும் அவருடன் டெவில் என்ற நாயும் உடன் இருக்கும்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 20வேதாளரின் மோதிரங்கள்: வேதாளரின் வலது கையில் இருப்பது மண்டையோட்டு சின்னம் கொண்ட கபால மோதிரம். இதன் மூலம் வேதாளர் ஒருவரைக் குத்தினால், அவரது முகத்தில் என்றுமே அழியாத சின்னமாக அது பதிந்துவிடும். இடது கையில் இருப்பது அனைவரும் மதிக்கும் நல்ல சின்னம். வேதாளரின் நண்பர்கள் என்று அர்த்தம் கொண்ட இச்சின்னம், காலம்காலமாக மக்களைக் காப்பாற்றும். இது எங்கே இருக்கிறதோ அங்கே வேதாளர் இருக்கிறார், அந்த இடம் அவரது பாதுகாப்பில் உள்ளது என்று அர்த்தம்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Cover 2தலைப்பு: Terror’s Mutiny

உருவாக்கியவர்: லீ ஃபாக்

கதாசிரியர்: டோனி டி பால்

ஓவியர்: பால் ரயான்

பதிப்பாளர்: ஃப்ரூ காமிக்ஸ்

எடிட்டர்: டட்லி ஹொகார்த்

பக்கங்கள்: 36 முழு வண்ணப் பக்கங்கள்

விலை: 278 ரூபாய்

வெளியீடு (அச்சில்): ஏப்ரல் 2016

வயது வரம்பு: 9+

One Liner: அதிபரைக் கடத்த நினைக்கும் தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்கும் வேதாளர்!

கதைச் சுருக்கம்: பெங்கல்லாவின் அதிபர் லமான்டா லுவாகா ஃபெலிகன் கடற்கரைக்கு விஜயம் செய்யும்போது, கப்பற்படை கமாண்டரிடம் அவரைக் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக நம்ப வைக்கின்றனர். அதைப்போலவே, ராணுவத்திடமும் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் இருக்கும்போது, அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளே அவரைக் கடத்துகின்றனர்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 29

ஆனால், அதிபர் தீவிரவாதிகளின் கையில் சிக்குண்டு இருக்கிறார் என்பதே இரு படையினருக்கும் தெரியாமல் இருக்க, வழக்கம்போல வேதாளர் அங்கே வருகிறார். எதற்காக அதிபரைக் கடத்த திட்டமிட்டார்கள் என்பதை அறிந்து அந்த சதியை முறியடிக்கிறார் வேதாளர்.

Verdict: வேதாளரின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.

குறிப்பு: வேதாளரை உருவாக்கிய லீ ஃபாக்கின் மரணத்திற்குப் பிறகு அவரது கதைகளை எழுதி வருபவர் டோனி டி பால். வேதாளரின் எதிரிகளிலேயே மிகக் கொடூரமானவனாகக் கருதப்படும் சாட்டு (பைதன்) என்ற பாத்திரத்தை உருவாக்கியவர் இவர்தான். இந்தக் கதையிலும் பைதன் வருகிறார். இந்தக் கதை 21 ஏப்ரல் 2014 முதல் 23 ஆகஸ்ட் 2014 வரை தினசரி நாளிதழில் வெளி வந்தக் கதை.

ஆன்லைனில் வாங்க : https://www.phantomcomic.com.au/collections/all/products/issue-1748-kiwi-cover-2016

Monday, May 08, 2017

0 Sudershan (Chimpanzee): ‘பாலிவுட் பாட்ஷா'வாக ஒரு குரங்கு மாறினால்?

SC Coverஇராம. நாராயணன் படங்களை இன்றைக்குப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றும். ஆனால், ஒரு காலத்தில் மக்களை ஈர்ப்பதிலும் வசூலிலும் அப்படங்களுக்குப் பெரும் பங்கு இருந்திருப்பது உண்மைதான்.

அது போன்று விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்பட அலை நாடெங்கும் பரவலாக இருந்த 60-களில் குரங்கு, ஆடு, நாய், யானை, குதிரை, கிளி, பாம்பு என்று பல உயிரினங்கள் வெள்ளித்திரையில் வெற்றித்தடம் பதித்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உயிரினம்/ நட்சத்திரத்துக்கு ஒரு பின்புலக் கதை இருந்து, அந்தக் கதையை கிண்டலாகவும் பகடியாகவும் சொன்னால், சிரிக்காமல் இருக்க முடியுமா?

ஆனால், பிளாக் ஹியூமர் வகையில் சொல்லப்பட்ட சுதர்சன் என்ற சிம்பான்சி குரங்கின் கதை, எவ்வளவுக்கெவ்வளவு நம்மைச் சிரிக்க வைக்கிறதோ, அவ்வளவுக்கு நம்மைச் சோகத்திலும் ஆழ்த்திவிடுகிறது. இந்தியாவில் வெளியான கிராஃபிக் நாவல்களில் ஒரிஜினாலிட்டியுன் கூடிய கதைகளில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குவது இந்த சுதர்சன் (சிம்பான்சி).

சினிமா டு காமிக்ஸ்

Rajesh DevRaj Author of Sudershan Chimpanzee

கௌபாய் படங்களைப் பகடி செய்யும்விதமாக வெளியான ‘குயிக் கன் முருகன்' திரைப்படத்தின் கதாசிரியர் ராஜேஷ் தேவராஜ்தான், சுதர்சன் சிம்பான்சியை உருவாக்கியவர். ஏற்கெனவே சில பிரபல குறும்படங்களுக்கும் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான அர்ஜுனுக்கும் கதை, திரைக்கதை எழுதியவர் இவர். அவரும் ஓவியர் மெரேன் இம்சேனும் இணைந்து 2005-ம் ஆண்டு ஒரு ஆறு பக்க காமிக்ஸ் சிறுகதையை உருவாக்கினார்கள்.

Meren Imchen Artist of Sudershan Chimpanzee

2007-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதைப் பெற்ற அனிமேஷன் படத்தை இயக்கிய ஓவியர் மெரேன் லேசுப்பட்ட ஆளல்ல. அந்தச் சிறுகதையை முழுவடிவ கிராஃபிக் நாவலாக மாற்ற 2009-ம் ஆண்டு பதிப்பகத்திடமிருந்து உத்தரவு வர, தங்களது தனிப்பட்ட வேலைகளுக்கு இடையில் மெதுவாக இந்த கிராஃபிக் நாவலுக்கும் இருவரும் வடிவம் கொடுத்தனர். இப்படியாக இந்த கிராஃபிக் நாவல் மூன்று ஆண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டு மும்பை ‘காமிக் கானி'ல் (காமிக்ஸ் திருவிழா) வெளியிடப்பட்டது.

SC Comic con 2012

கதை உருவான கதை

ராஜேஷ் அதற்கு முன்பாக ‘The Art of Bollywood' என்ற புத்தகத்தை எழுதியபோது, பழைய பாலிவுட் படங்களின் போஸ்டர்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார். அதற்கு முன்பாக அவர் ‘சேனல் வி'யில் பாலிவுட்டின் இரண்டாம் நிலை திரைப்படங்களை (B Grade Films  பற்றிய ஒரு நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தார். இப்படியாக பாலிவுட் படங்களின் பின்புலத்தைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் திரட்டியதால், அவற்றைப் பின்னணியாகக்கொண்டு இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.

காமிக்ஸே ஒரு சினிமா

sample 1படைப்பாளிகள் இருவருமே திரைப்படங்களில் பணிபுரிந்ததாலோ என்னவோ, இந்த கிராஃபிக் நாவல் முழுவதுமே ஒரு திரைப்படத்துக்கான வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் தன்னுடைய ஃபிளாஷ்பேக்கில் கதை சொல்வதுபோல ஆரம்பிக்கப்பட்டு, திரைக்கதை பாணியிலேயே கதை நகர்கிறது. ஓவியங்களுமேகூட க்ளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்று காட்சிக்கேற்ப மாறுகின்றன. குறிப்பிட்ட ஒரு உணர்ச்சியை வாசகருக்குக் கடத்த வேண்டி, கதை முழுவதும் கறுப்பு வெள்ளையிலேயே வரையப்பட்டுள்ளது. வசனங்கள் வேகமாக நகரும் கதைக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமில்லாமல், கதையை ஒருபடி மேலே உயர்த்தி, திரையரங்கில் இருப்பது போன்ற சூழலை உருவாக்கிவிடுகின்றன.

இந்தக் கதையின் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கதையில் வரும் உயிரினங்கள், உயிரினங்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதுதான். ஒரு வாலில்லாக் குரங்கு, வாலில்லாக் குரங்காகவே வருகிறதே தவிர, அது மனிதர்களைப் போல நடந்துகொள்வதில்லை. ஆனால், ஒரே வித்தியாசம் இந்த உயிரினங்கள் மனிதனைப்போல பேசும், நடக்கும் என்பதை இந்தக் கதை தனக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

பாலிவுட் ஹீரோ

sample 2சார்மினார் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே, ஒரு டீக்கடையில் அமர்ந்தவாறு தனது பழைய நினைவுகளை அசைபோடுகிறது ஒரு சிம்பன்சி குரங்கு. படிப்பு சரியாக ஏறாததால், சர்க்கஸில் வேலைக்குச் சேர்கிறார் நமது சுதர்சன். அங்கே அடிமையாக நடத்தப்படுவது பிடிக்காமல் மும்பைக்கு வந்து, பல சிக்கல்களைச் சந்தித்து, பின்னர் சினிமா ஸ்டுடியோவில் எடுபிடியாகச் சேர்கிறார். பிரபல இயக்குநர் ஷாவின் பார்வையில் பட, திடீரென்று ஒருநாள் சுதர்ஷனை ஹீரோவின் நண்பனாக்குகிறார் ஷா.

பின்னர் தனி ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக சுதர்சன் உருவெடுக்கிறார். அதன் பின்னர் ஒவ்வொரு படமும் வெற்றிப்படி கட்ட, சுதர்சன் பாலிவுட்டின் அசைக்க முடியாத சக்தியாகிறார். அனைத்தும் இருந்தும் தனது வாழ்க்கையில் ஒரு வெறுமை இருப்பதை உணரும் சுதர்சனுக்கு, ஒரு தென்னிந்திய நடிகையின் மீது காதல் உருவாக, அவரது சரிவு ஆரம்பமாகிறது. இப்படியாக காதல், நட்பு, துரோகம், பரிவு, ஏமாற்றம், பழி வாங்கும் எண்ணம், விமோசனம் என்று ஒரு அக்மார்க் சினிமாவுக்கான கதையைக் கொண்டுள்ளது இந்த கிராஃபிக் நாவல்.

முடிவு

திரைக்கதையின் வழியாக இந்த கிராஃபிக் நாவலை உச்சத்துக்குக்கொண்டு சென்ற படைப்பாளிகள், அவர்கள் பின்னிய வலையிலேயே சிக்கியதைப் போல, கதையின் முடிவை சினிமாத்தனமாக அமைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணர முடிகிறது. இந்த கிராஃபிக் நாவலின் ஓவிய பாணி கதைக்கு உதவுகிறது என்றாலும், வாசகரைச் சற்றே தடுமாற்றவும் செய்கிறது.

என்ன சொல்கிறது சுதர்சன் சிம்பான்சி?

  • சினிமா உலகை எந்த அளவுக்குப் பகடி செய்ய முடியுமோ அந்த அளவுக்குப் பகடி செய்திருந்தாலும்கூட, கதையில் ஒரு நம்பகத்தன்மை தொடர்வதே இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு.
  • தென்னிந்தியாவின் உயிரினங்களை வைத்துப் படமெடுத்துப் புகழ்பெற்ற சாண்டோ சின்னப்பா தேவர் முதல் பிரபல இந்தி இயக்குநர் ராஜ் கபூர் வரை கதையில் வருகிறார்கள்.
  • இந்தியாவின் பிரபல கார்பரேட் சாமியாரை மிகவும் திறமையாகக் கதைக்குள் கொண்டுவந்து, அவருடைய சுயரூபத்தை வெளிப்படுத்தினாலும், அவரால் நாயகன் உண்மையை உணர்வதாக ஒரு திரைக்கதை ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார்கள்.
  • நடிகைகள் நடத்தப்படும் விதம், மார்கெட் இழந்த பிறகு நடிகர்களின் நிலைமை, திரைப்பட உலகின் சம்பிரதாயங்கள் என்று பல விஷயங்களையும் கதையினூடே கொண்டு வந்தது, கதையோட்டத்தைச் சிறப்பாக்கி இருக்கிறது.
  • ஒரே நாளில் உச்சத்துக்குச் செல்வது, திரையுலகின் முக்கியப் புள்ளியைப் பகைத்துக்கொண்டதால், ஒரே நாளில் கட்டம் கட்டப்படுவது என்று திரையுலகின் நிழலான சக்தி மையங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
  • எப்படி ஒருவரது மரணம், ஃபிளாப் ஆன ஒரு திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றுகிறது என்பன உள்ளிட்ட‌ பல திரையுலக அவலங்களையும் சொல்கிறது.

The Hindu Tamil Daily Dated 01st April 2016 Ilamai Puthumai Segement Page No 04 Sudershan Chimpanzee Review

டைட்டில்: சுதர்சன் சிம்பான்சி
கதை: ராஜேஷ் தேவராஜ்
ஓவியம்: மெரேன் இம்சேன்
பதிப்பகம்: ஹஷெட் இந்தியா
பக்கங்கள்: பெரிய அளவில் 124 பக்கங்கள்
வெளியீடு: டிசம்பர் 2012.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: அமேசான் டாட் இன் (220 ரூபாய்)

குறிப்பு: இந்தியாவின் ஆகச்சிறந்த கிராஃபிக் நாவல்கள் என்ற பட்டியலை 2016ஆம் ஆண்டு தி இந்து தமிழ் நாளிதழில் வெளியிட்டபோது, சுதர்ஷன் (சிம்பன்சி) அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.

நன்றி: தி இந்து – தமிழ் நாளிதழ்

Friday, April 07, 2017

9 பொன்னியின் செல்வனும், நொந்த நானும்!!!

எல்லாம் ஆரம்பித்தது வாசிப்பாளர் மற்றும் தமிழ் பதிப்பக உலகின் Historian ஆன திரு சின்னஞ்சிறு கோபு அவர்களின் ஒரு போன் காலில் இருந்துதான்.

சரியாக சென்ற ஆண்டு இதே நாளில்தான் அவர் என்னை அழைத்தார். ஓவியர் தங்கம் என்பவர் 3கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனை காமிக்ஸ் வடிவில் தயாரித்து இருப்பதாகவும் என்னிடம் சொன்னார். தமிழ் காமிக்ஸ் உலகில் ஏதேனும் ஒரு முயற்சி நடந்தால், அதற்கான ஆர்வமும் அதை சரியான வழியில் கொண்டு செல்லவேண்டும் என்ற விருப்பமும் இருந்ததால், அவர் என்னை அழைத்து விவரங்களைக் கூறினார். ஏற்கனவே தமிழில் உருவாக்கப்பட்ட சித்திரக்கதை முயற்சிகள் என்ற ஒரு கட்டுரையில் அவரது புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். குமுதம் இதழில் வெளியானது அக்கட்டுரை. கோபு அவர்கள் இந்த புத்தக முயற்சியைப் பற்றி ஏதேனும் கட்டுரை எழுத இயலுமா? என்று கேட்டார்.

நானும் சரியென்று அந்த ஓவியரை என்னிடம் தொடர்பு கொள்ளுமாறு கூறினேன். திரு கோபு அவர்கள் என்னுடைய தொலைபேசி எண்ணைக் கொடுக்க, அந்த ஓவியர் உடனே எனக்கு அழைப்பு விடுத்து பேசினார். அவருடைய புத்தகங்களை நான் 2008லேயே வாங்கி இருந்தேன். அதனால், என்னுடைய முகவரி அவரிடம் ஏற்கனவே இருந்தது. உடனே அவர் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (?!?!) புத்தகத்தின் அட்டை, மாதிரி பக்கங்கள், அவருடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்று பலவற்றையும் எனக்கு அனுப்பி இருந்தார். (அனுப்பி விட்டேன் என்று ஒரு போன்கால், மறுநாள் வந்துவிட்டதா? என்று ஒரு போன்கால், படித்து விட்டீர்களா? என்று இன்னொரு கால் என்று ஏகப்பட்ட போன்கால்கள்).

அடுத்து நான் டைப்புவதை சர்வ நிச்சயமாக திமிர் என்றுதான் பலரும் பேசப்போகிறார்கள்.

உடல் பாகங்களில் ஒரு Consistency இல்லாமல், 1960களில் வரும் ஒரு முயற்சியாகவே அது எனக்குப் பட்டது. மேலும், அது காமிக்ஸ் என்ற ஒரு அற்புதமான மீடியத்தை, வெறும் ஓவியங்கள் மற்றும் வசனங்கள் மட்டும் இருப்பதுதான் என்ற புரிதலின் பேரிலேயே கட்டமைக்கப்பட்டு இருந்தது. ஒரு நாவலுக்கும் காமிக்ஸ்சுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகள் கூடத் தெரியாமல், Sequential Art அருகிலேயே நெருங்க முடியாமல், அதன் அடிப்படை இலக்கணத்தை மீறி இருந்தது.

2

அவருடைய ஓவிய மாதிரிகளை எனக்கு என்று இருக்கும் ஒருசில நண்பர்களிடம் கொடுத்து மதிப்பீடு செய்யுமாறு கோரினேன். அவர்கள் என்னை விட மோசமாக மதிப்பீடு செய்திருந்தர்கள். ஆனால், என்னுடைய பாழாய்ப்போன இரக்க குணம் அதற்குள் அந்த 81 வயது முதியவரின் தேன் கலந்த பரிதாபப் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு விட்டது.

அப்போதுதான் என்னுடைய TCU Syndicate மூலமாக தமிழில் சில பல காமிக்ஸ் கதைகளை உருவாக்கி, இதற்கான ஒரு வணிக சந்தையை உருவாக்கும் முயற்சியில் இருந்தேன். ஆகவே, இந்தக் கதையை நான் எடுத்து, அதை பட்டி டிங்கரிங் செய்து, அதில் இருக்கும் பிழைகளைக் களைந்து, அதை மேம்படுத்தி, என்னுடைய பதிப்பகம் மூலமாக வெளியிடலாம் என்று ஒரு முடிவெடுத்தேன். என்னுடைய நண்பர்கள் மற்றும் நான் கலந்தாலோசித்த ஒரு பிரபல பத்திரிகையாளர் என்று பலரும் இது தேவையா? என்றே கேட்டனர். பாவம் பார்த்து நான் எடுத்த ஒரு முடிவு, எனக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டச் செலவு வைக்கும் என்று நான் யோசிக்கவே இல்லை.

அதன்பிறகு, தினமும் எனக்கு அழைப்பு வரும். “சார், விஸ்வா சார், எப்போ சார் வரீங்க? நான் காத்துகிட்டு இருக்கேன் சார்”. இப்படித்தான் அந்த அழைப்பு ஆரம்பிக்கும். நான் ஈடுபட்டிருக்கும் தொலைக்காட்சி சார்ந்த பணியில் திடீரென்று 2 நாட்கள் விடுமுறை எடுப்பது (அப்போது) கடினமாக இருந்தது. ஆகவே ஏப்ரல் மாதம் கடைசி வார வியாழன் அன்று நான் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்குக் கிளம்பினேன். அன்று இரவு கிளம்பும்போதும், பேருந்தில் ஏறும்போதும், காலை 5 மணிக்கும் என்று பலமுறை அழைத்து விட்டார் அந்த ஓவியர்.

என்னுடைய நண்பர் ஒருவர் (அவருடைய வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு) முந்தைய நாள் நள்ளிரவே வந்து, ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து இருந்தார். ஆக, 2 நாள் அங்கிருப்பது என்பது ஹோட்டல் கணக்குப்படி 3 நாள் ஆகிவிட்டது (இங்கேயே செலவு நான் போட்டிருந்த பட்ஜெட்டை விட தாண்ட ஆரம்பித்திருந்தது). காலை 7 மணிக்கு அறைக்கு வந்ததில் இருந்து, நாங்கள் கிளம்பும் வரை 17 அழைப்புகள் (யெஸ், 17. இதில் விடியற்காலையில் அழைத்தது எல்லாம் கணக்கில் இல்லை).

9.30 மணிக்கு அறையிலிருந்து நண்பரின் காரில் கிளம்பியபோதே மூன்றாவது ரவுண்டு அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டது. He was so desperate that ”சார், விஸ்வா சார், நான் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறேன், சார்” என்று ஒரு 11 தடவை அழைத்து சொன்னார். அவர் சொன்ன முகவரியைக் கடந்து சென்றுவிட்டு, பிறகு திரும்பி அவரது வீட்டிற்குச் சென்றேன். சொன்னதுபோலவே வீட்டின் வாசலிலேயே காத்திருந்தார்.

வீட்டிற்குள் சென்றோம். மாடிக்கு அழைத்துச் சென்றார். அவரது படங்களை எல்லாம் காட்டினார். எல்லாமே ஓவியங்கள்தான். ஆனால், காமிக்ஸ் ஓவியங்கள் அல்ல. There is an obious difference between illustrations and Sequential Art. ஆனால், இரண்டு தலைமுறைக்கு முந்தையவரான அவருக்கு அது புரியவில்லை. Caption Box என்பது ஒரு கதாசிரியரின் குரல். சினிமாவில் வருமே Voice over, அது போல வலிமையான ஒரு Tool அது. ஆனால், அவருக்கு அதெல்லாம் தெரியவில்லை. அவரது அளவிற்கு, அவரது திறமைக்கு வரைபவர் அவர். இப்போதைய காமிக்ஸ் உலகம் புலிப்பாய்ச்சலில் எங்கே செல்கிறது என்று கூட அவருக்குத் தெரியவில்லை.

வழக்கம்போல, என்னுடைய தகவல்களால் அவர் ஆச்சரியம் அடைந்தார். அவரைப்பற்றி பல தகவல்களை நினைவுபடுத்தினேன். அவர் வரைந்த பொன்னி காமிக்ஸ் இதழைப்பற்றிப் பேசினோம். பின்னர், அவரது புத்தகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தோம். அவர் ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு நேரில்லாமல், ஒழுங்கில்லாமல், பெரிய சார்ட் பேப்பரில் வரைந்திருந்தார். (அதை ஜெராக்ஸ் கடையில் கொடுத்து, மினியேச்சர் ஜெராக்ஸ் செய்து, அதைத்தான் புத்தகமாக வெளியிடுவாராம். அந்தப் புத்தகத்தை கையில் வைத்திருக்கும் யாராவது அதை எடுத்து, அதன் Sharpness, clarity, Panel structure பற்றி ஒருமுறை சரிபாருங்கள், நான் சொல்வது புரியும்).

1

நான் உடனே, ஐயா அப்படி புத்தகம் தயாரிப்பதே தவறு என்று விளக்கினேன். உடனே, இப்போது என்ன செய்வது என்று கேட்டார். இந்த ஓவியங்களை ஸ்கேன் செய்து,அதை கம்ப்யூட்டரில், போட்டோஷாப்பில் எடிட் செய்து, Sharpness மற்றும் ஓவியங்களை Straighten செய்து, அதன்பிறகு தான் அதை அச்சிட வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவர் சரி, நீங்கள் அப்படி அதை டிஜிடைஸ் செய்து மாற்றுங்கள் என்று சொன்னார். ஆனால், பிரச்சனை என்னவென்றால், அவை A 3 அளவில் இருந்தன. என்னிடம் இருக்கும் அனைத்து ஸ்கேன்னர்களுமே A 4 தான். ஆகவே, இந்த புராஜெட்டிற்காகவே ஒரு A 3 ஸ்கேன்னர் வாங்கியாக வேண்டிய கட்டாயம் உருவானது (116 பக்கங்களை கடையில் கொடுத்து, அதுவும் ஒரிஜினல் ஓவியங்களைக் கொடுத்து ஸ்கேன் செய்வது பாதுகாப்பானதல்ல).

நான் சில நிபந்தனைகளை விதித்தேன்.

1. அந்த காமிக்ஸ் புத்தகம் வண்ணத்தில் வெளியாக வேண்டும் (கருப்பு வெள்ளையில் காணப்படும் அவரது பலவீனங்களை, வண்ணக் கலவை அழகாக மறைத்து விடும் என்பது என்னுடைய எண்ணம்).

2. 110 பக்கங்களுக்கு அவர் வரைந்திருந்த அந்த கதையை அங்கேயே புரட்டிப் பார்த்து, அது மொத்தமே 86 பக்கம்தான் வரும் என்று சொல்லிவிட்டேன் (ஒரே ஓவியத்தை, ஒரே காட்சியை பலமுறை ரிபீட் செய்து, படிக்க முடியாதபடி இருந்தது).

3. புத்தகம் முறைப்படி சென்னையில், மதுரையில், தஞ்சையில், ஈரோட்டில் என்று மொத்தம் 5 இடங்களில் விமரிசையாக வெளியிடப்படும்.

இதற்கெல்லாம் ஒப்புக்கொண்ட அவர் உடனே, “சார், விஸ்வா சார். எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கு சார். எனக்கு இந்தப் புத்தகத்தை (ஒரு தேதியைச் சொல்லி) அன்று முதலில் இங்கே தஞ்சாவூரில்தான் வெளியிட வேண்டும், சார். அதன்பிறகு நீங்கள் சொல்வதுபோல செய்யலாம், சார்” என்றார். அவர் சொன்ன தேதி, ஏறக்குறைய 6 வாரங்களில் வருகின்ற ஒரு நாள். அதற்குள்ளாக, முதலில் அவரது ஓவியங்களை ஸ்கேன் செய்ய வேண்டும், கோணல் மானலாக இருக்கும் அவற்றை போட்டோஷாப்பில் நேராக வருமாறு செய்ய வேண்டும், வசனங்களை பொருத்த வேண்டும், வண்ணம் தீட்ட வேண்டும், பிரிண்ட் செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட வேலைகள். நான் பொறுமையாக, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு, பொங்கல் நேரத்தில் வெளியிடலாம் என்றுதான் இருந்தேன்.

ஆனால், அவர் தொடர்ந்து சென்ட்டிமென்ட்டாகப் பேசி, அவர் சொன்ன தேதியிலேயே புத்தகத்தை வெளியிட வைக்க வேண்டும் என்று பேசி வந்தார். ஒரு கட்டத்தில், அவர் உணர்ச்சிகரமாக சில காரணங்களை எல்லாம் சொன்னார். வழக்கம்போல நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால், வண்ணம் தீட்டி, கலரில்தான் இந்தக் காமிக்ஸ் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதற்கு அவர், தனது மனைவியை வைத்து, இருவரும் சேர்ந்து வண்ணம் தீட்டி தருவதாகச் சொன்னார். ஆனால், நேரமோ இல்லை. ஏறக்குறைய ஒரு மாதத்தில் இதையெல்லாம் செய்தாக வேண்டும். நானும் சரியென்று சொல்லி, ஒரு தேதியைச் சொல்லி, இதற்குள் நீங்கள் முழுவதுமாக வண்ணம் தீட்டிக் கொடுத்தால், நிச்சயமாக அந்தத் தேதிக்குள்ளாக வெளியிடலாம் என்றேன். (ஆனால், அந்தத் தேதிக்குள்ளாக வெளியிட வேண்டுமென்றால், நாங்கள் உடனேயே அவற்றை ஸ்கேன் செய்து, எடிட் செய்து வேலையை உடனே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனாலேயே என்னுடைய திட்டத்தில் பல மாறுதல்களைச் செய்ய வேண்டி இருந்தது).

அவர் ஒப்புக்கொள்ள, பின்னர் நான் அவரிடம் ராயல்டி பற்றி பேசினேன். தமிழ் பதிப்பக உலகில் 7% முதல் 10% வரைதான் ராயல்டி கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சூப்பர் ஸ்டார் ரைட்டரின் புத்தகத்திற்குத்தான் 12% என்று நிர்ணயிக்கிறார்கள். நான் தான் பிழைக்கத் தெரியாதவன் ஆயிற்றே? எடுத்த உடனே 15% ராயல்டி கொடுக்கிறேன் என்று சொன்னேன். அவர் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு, உருக்கமாகப் பேச ஆரம்பித்தார். என்னுடன் வந்திருந்த நண்பர் என்னுடைய கையைப் பிடித்தார். ஆனால், அதற்குள் நான் பேச ஆரம்பித்து இருந்தேன்.

ராயல்டி பேசுவது சரி. ஆனால், கொடுக்கிறார்களா? என்றால், நல்ல கதை. நண்பர்கள் சொக்கன் மற்றும் பா ராவிடம் கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் கதை கதையாக. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பதிப்பகத்திடம் சிக்கி அவர்கள் எப்படி சிரமப்பட்டார்கள் எனபதை. (இப்போதும் வரவில்லையாம்).

ஆனால், நான் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் அன்று 15% தருவதாகவும், அச்சிடப்படும் புத்தகங்கள் விற்றுத் தீர்த்த உடனே மேலும் 10% தருவதாகவும் சொன்னேன். 25% தொலை எவ்வளவு தெரியுமா? It was a 6 digit Figure.

அவரது வற்புறுத்தலின் பேரில் மதிய உணவருந்திவிட்டு கிளம்பினோம். நாளைக்கு வந்தால், ஒரிஜினல் ஓவியங்களை ஸ்கேன் செய்யத் தருவதாகக் கூறினார். மேலும், அந்த வசனங்களை டைப்பிங் வேறு செய்ய வேண்டும். அதற்கும் செலவு ஆகும். ஆக. டைப்பிங் செய்ய ஒரு ஜெராக்ஸ் காப்பியைத் தருவதாகச் சொன்னார். அப்படியே தனது மகனிடமும் பேசிவிடுவதாகவும் சொன்னார்.

அன்று மதியமே ஒரு A 3 ஸ்கான்னரை நண்பரிடம் சொல்லி ஆர்டர் செய்துவிட்டோம், 26, 000 ரூபாய். வெறும் இந்தப் புராஜெக்டிற்காக மட்டும். அன்று மாலை தெறி படத்தைப் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம் (அந்த தியேட்டரைப் பற்றி ஒரு திரைப்பட வினியோகஸ்தரிடம் சொல்லி, இப்போது அவர் அதை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார் என்பது தனிக்கதை). அன்றிரவே Zoho Corpல் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் பேசி, ஒரு ஆன்லைன் ஷாப்பிங் சைட்டை தயார் செய்யத் திட்டமிட்டோம். அவரிடம் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கினேன்.

மறுநாள் காலையில் 11 மணி வரையில் அறையிலேயே தான் இருந்தோம். ஆனால், இன்று ஒரு தொலைபேசி அழைப்பும் வராததை நண்பர் சுட்டிக் காட்டினார். நானும் அதை கண்டுக்கொள்ளவில்லை. 12 மணி வாக்கில் அவரது வீட்டிற்குச் சென்றோம். அவரும் சொன்னதுபோலவே ஒரிஜினல் ஓவியங்களையும், ஒரு ஜெராக்ஸ் பிரதியையும் (சிறிய சைசில்) கொடுத்தார். நான் ஸ்கேன் செய்வதைவிட, நண்பர் நன்றாகவே ஸ்கேன் செய்வார் என்பதால், ஒரிஜினல் ஓவியங்களை அவரிடமே கொடுத்திருந்தேன். டைப்பிங் செய்ய மட்டும் நான் அந்த ஜெராக்ஸ் பிரதியை கொண்டு வந்தேன். அன்று மதியம் தஞ்சாவூரிலிருந்து கிளம்பி, திருச்சியில் பாலா சாரை சந்தித்து விட்டு, இரவு மதுரையை அடைந்தேன் (அன்று மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கூட்டம் ஒன்று இருந்தது). ஆகவே, எனது க்ரைம் டைம் காமிக்ஸ்சில் வரும் ஒரு கதைக்காக அந்தக் கூட்டத்தை பல கோணங்களில் போட்டோ எடுத்துக்கொண்டு சென்னைக்கு திரும்பினேன்.

Call Taxi to Koyambedu (To & From) = 800

Bus Fare (To & Fro) = 2, 200

Hotel Room Rent for 3 Days = 5, 100

Food & Petrol for the Car used = 2, 400

Bus Fare for Friend = 1, 800

A 3 Scanner Purchased = 26, 000

இதுதான் அந்தப் பயணத்தால் எனக்கு ஏற்பட்ட செலவு. முன்னாள் முதல்வரின் கூட்டம் காரணமாக மதுரையிலிருந்து பேருந்து மிகவும் தாமதமாகக் கிளம்பியது. மறுநாள் மதியம்தான் சென்னைக்கே வந்தது. அசதி மற்றும் களைப்பால் அயர்ந்து தூங்கிவிட்டேன். மாலை, இல்லை இல்லை, இரவு கண்விழித்துப் பார்த்தால், அந்த ஓவியரிடமிருந்தும், எனது நண்பரிடமிருந்தும் அழைப்புகள் இருந்தன. முதலில் நண்பருக்கு அடித்தேன். அவர் சொன்னது இதுதான். முதல் புத்தகத்தை அவர்களே அச்சடித்துக் கொள்கிறார்களாம். ஆகவே. ஒரிஜினல்களை திருப்பித் தரும்படி கேட்டாராம். எனக்கு பயங்கரமான கோபம். மட்டுப்படுத்திக்கொண்டு, அந்த ஓவியரை அழைத்தேன்.

“சார், விஸ்வா சார். என் மகனிடம் பேசினேன். முதல் புத்தகத்தை நாமே அச்சிடலாம் என்று சொன்னான் சார். நிச்சயமாக இரண்டாம் புத்தகத்தை நீங்கள்தான் அச்சிடவேண்டும் சார். சார், அந்த கட்டுரைகளை எழுதுவதாகச் சொன்னீர்களே? அது எப்போது எழுதுவீர்கள் சார்?” என்று அவரது காரியத்திலேயே குறியாக இருந்தார். அவர் கொடுத்த ஜெராக்ஸ் புத்தகத்தை கொரியரில் அனுப்பினேன். ஆனால், அன்றிரவு 8 மணிக்குள்ளாக கொரியர் சர்வீஸ் கட் ஆஃப் என்பதால், அன்றிரவு அது டெஸ்பாட்ச் ஆகவில்லை. மறுநாள் கிளியர் ஆகி, அதற்கடுத்த நாள் அது அவரது வீட்டிற்குச் சென்றது. அன்று அவரும் அவரது துணைவியாரும் சிவகாசி சென்றதால், கொரியர் டெலிவரி ஆகவில்லை. ஆனால், அதே சமயம் என்னுடைய நண்பர் அனுப்பிய ஒரிஜினல் ஓவியங்கள் மறுநாளே (செவ்வாய்க்கிழமையே) சென்று சேர்ந்து விட்டது.. இதற்குள்ளாக, அவர் “சார், விஸ்வா சார், அந்த ஜெராக்ஸ் புத்தகத்தை அனுப்பி வையுங்கள் சார்” என்று 2, 3 முறை அழைத்து விட்டார். நானும் கொரியர் டெலிவரி செண்ட்டரில் கேட்டால், அவர்கள் அவர் வீட்டில் இல்லாததைச் சொன்னார்கள். ஆனால், அந்த ஓவியரோ, அதற்குள் நான் அவருடைய ஓவியங்களை கைப்பற்ற நினைத்ததாக பலரிடம் கட்டுக்கதைகளை கிளப்பி விட்டுவிட்டார்.

வதந்திகளை கிளப்புவதற்கென்றே வாழ்ந்துகொண்டிருக்கும் சில நல்ல உள்ளங்கள் என்ன ஏது என்று ஒரு விவரமும் தெரியாமல் இதை பலரிடமும் ஏதோ பெரிய இன்வெஸ்டிகேஷனைச் செய்து கண்டுபிடித்ததைப் போல பரப்பி வருகிறார்கள்

நான் கொடுப்பதாகச் சொன்ன ராயல்டி தொகை அவருக்கு ஒரு ஆசையை உருவாக்கி விட்டிருக்கும். அவரது மகனும், அதற்கு ஒத்து ஊத, அவர்களே புத்தகத்தை அச்சிட முடிவெடுத்து விட்டார்கள். சரி, தவறில்லைதான். ஆனால், இந்தக் கொடுமையில்,

  • முதல் நாள் ஒரிஜினலைக் கொடுத்து, மறுநாளே திருப்பிக் கேட்டது ஏன்?
  • அவரே அச்சிடுவதாக இருந்தால், என்னை வரசொன்னது ஏனாம்?
  • எனக்கு ஏற்பட்ட 40, 000 ரூபாய் நஷ்டத்திற்கு யார் பதில் சொல்வது?
  • நண்பருக்கும், எனக்கும் 3 நாட்கள் இந்த முயற்சியில் வீணானதே, அதற்கு யார் பொறுப்பு?
  • அச்சிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவரைப் பற்றி கட்டுரைகளை எழுதச் சொல்லி கேட்பது என்ன வகை?

வதந்திகளைப் பரப்புவதற்கு ஏற்ற வகையில் இதை பலரிடமும் பேசி வரும் அந்த ஓவியர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது புலம்பல்களை நம்பி, வதந்திகளை பரப்புவதே குலத்தொழிலாகக் கொண்டவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், என்னைப்போல வேறு யாரும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாந்து விடவேண்டாம் என்பதற்காகவே இந்தப் பதிவு. வயதான அவருக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நல்ல சிந்தனையையும், அடுத்தவரை காயப்படுத்தாத எண்ணங்களையும் கொடுக்க பிரார்த்தனை செய்கிறேன்.

வழக்கம்போல, மேலே சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னிடம் ஆதாரங்கள், சாட்சிகள் இருக்கின்றன. மின்ன்ஞ்சலில் அனுப்பப் பட்ட அவரது ராயல்டி தொகைக்கான கணக்கீடு முதல் அவர் பேசியதின் ரெக்கார்டிங் வரை என்னிடம் உள்ளது. இப்போதும்கூட இதை நான் வெளியிடாமல் இருந்த்தற்கு காரணமே அந்த ஓவியரின் வயதுக்கு மரியாதை அளித்துத்தான். ஆனால், Age is just a Number, it has nothing to do with Maturity என்பதை இவரைப் போன்றவர்கள் நமக்கு நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் வழக்கமாகச் சொல்வதுதான். என்னைப் பற்றி பேச இந்த மாதிரியானவர்களுக்கு எதுவும் இல்லாமல், அவதூறுதான் கிளப்ப வேண்டும். ஆனால், நான் உண்மையைச் சொன்னாலே போதும், இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டுவிடும்.

Related Posts with Thumbnails